'சில பேருக்கு, நாக்கு தான் முதல் விரோதி' என, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:தி.மு.க., தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க,வினரைத் தாக்குவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது அபாண்டமான, அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. டாக்டர் ராமதாசுக்கு அண்மைக் காலத்தில், இப்படி தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்ற ஒரு கெட்ட பழக்கம் வந்து விட்டது போலும். ராமதாசின் நடவடிக்கைகள் பற்றி தி.மு.க.,வினர் எதுவும் சொல்வதில்லை.தி.மு.க.,விற்கு வேறோருவரைத் தூண்டி விட்டு, தாக்குதல் நடத்தும்படி சொல்கிற ஈன புத்தி, என்றைக்கும் கிடையாது. அ.தி.மு.க., ஆட்சியில், பா.ம.க.,வினர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டபோது, தி.மு.க., சார்பில், அதைக் கண்டித்ததோடு, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், அந்த வழக்குகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டன.
கடந்த, 1992ம் ஆண்டு, 'பா.ம.க.,வை வன்முறை இயக்கம்' என, அ.தி.மு.க., அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய போதும் கூட, அதைக் கடுமையாக எதிர்த்தவன் நான். அதுவும் அம்பேத்கர் சிலையை உடைக்க, தி.மு.க., காரணம் என்றெல்லாம் ராமதாஸ் கூறுகிறார். அம்பேத்கர் புகழினை உயர்த்த, தி.மு.க., எந்த அளவிற்கு செயல்பட்டது என்பதை, சுட்டிக்காட்ட வேண்டுமானால், அவரது நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. பல்கலைக் கழகங்களுக்கு அவரது பெயர் அமையப் பாடுபட்டது என, ஏராளமாகச் சொல்லலாம். ஆனால், ராமதாஸ், 'வன்முறை, தி.மு.க.,விற்கு கை வந்த கலை' என, விமர்சனம் செய்திருக்கிறார். சில பேருக்கு, நாக்கு தான் முதல் விரோதி.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE