புதுடில்லி :'மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி, சுனந்தா, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும்' என, டில்லி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, சசி தரூரின் மனைவி சுனந்தா, 52, சமீபத்தில், டில்லி ஐந்து நட்சத்திர ஓட்டலில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இவரின் மரணம் குறித்து, டில்லி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், அலோக் சர்மா விசாரித்து வருகிறார். சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, நேற்று, இவரிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், டில்லி போலீசாருக்கு, அலோக் சர்மா அனுப்பியுள்ள அறிக்கை: சுனந்தாவின் மரணம், அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிட்டதால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் மட்டும் விசாரிக்க கூடாது. அவர், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும். 'சுனந்தா கொலை செய்யப்படவில்லை' என, அவரின் குடும்பத்தினர் தெரிவித்தாலும், அதை கருத்தில் கொள்ளாமல், அந்த அடிப்படையிலும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE