ஒருவர் பீகாரை ஆட்சி செய்தவர். மற்றொருவர் உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்தவர். ஒருவர் மத்திய ரயில்வே அமைச்சராகவும்; மற்றொருவர் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்துள்ளனர். இருவரும் ஒரே பிரிவை சேர்ந்தவர்கள்.
கீரி - பாம்பு போல : காங்கிரசை ஆதரிப்பதிலும், அதை தாங்கிப் பிடிப்பதிலும், வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுவதில், இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. அரசியல் வளர்ச்சியில், இவ்வளவு ஒற்றுமை இருந்தும், இருவர் இடையேயான நட்பு, கீரி - பாம்பு போலத் தான். இந்த பிரபல தலைவர்கள் இடையேயான கசப்பு உணர்வு, பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஒருவர், மற்றொருவரின் வளர்ச்சியை
எப்போதும் ஏற்றதில்லை. கடந்த, 1997ல் போதிய ஆதரவு இல்லாததால், தேவகவுடா ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமராக, முலாயம் சிங் யாதவை ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த லாலு, "முலாயம் சிங்கை பிரதமராக முன் மொழிவதை விட, விஷத்தை குடிக்கச் சொன்னால் குடித்து விடுவேன்' என, சாடினார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட லாலு, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். உடனே அவர், உ.பி., முசாபர் நகர் கல வரத்தில் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்தார். அப்போது, ஆளும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகத் தான், "காங்கிரசின் எடுபிடி லாலு' என, முலாயம் சிங் விமர்சித்தார்.
சமாஜ்வாதிக்கு இருக்கும் சிறுபான்மையினர் ஆதரவை, லாலுவின் பிரசாரம் மூலம் அசைத்துப் பார்க்கலாம் என, காங்., கணக்குப் போடுகிறது. ஐ.மு., கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில், பீகாரில் காங்., -- லாலு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு கணிசமான இடங்களை கைப்பற்றின. ஆனால், 2009ல், லாலுவுக்கு வெறும், நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இரட்டை வேடம் : இதையடுத்து, அதற்கு பதிலாக சமாஜ் வாதியை, காங்கிரஸ் தங்கள் அணியில் சேர்த்தது. அப்போது, சமாஜ்வாதியை மதச்சார்பற்ற கட்சி என்று கூறிய காங்., தற்போது, அதே சமாஜ்வாதியை விமர்சிக்கிறது. இதிலிருந்து, காங்., கட்சியின் இரட்டை வேடம் புரிகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக, முலாயம் விரைவில் பீகாரில் பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் தேர்தலில், பீகாரில் அதிக இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக, அங்கு ஆட்சியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கலாம் என, சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், காங்., மற்றும் லாலுவின்- ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு சவால் விட, சமாஜ்வாதி எண்ணியுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE