அருள்மிகு ஸ்ரீசக்திகணபதி திருத்தலம் இலண்டனில் கிராய்டன் அருகில் தார்டன் ஹீத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் கிராய்டனில் இருந்து 2 மைல் தூரத்திலும், கேட்விக் விமானநிலையத்திலிருந்து 19மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் இந்திய இலங்கை கலாச்சாரத்தைப் பின்பற்றிவழிபாடுகள் நடத்தப்படுகின்றன.இந்தியா இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இலண்டன் வாழ் மக்களும் இலண்டன், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல்வேறுநாட்டு மக்களும் இத்திருத்தலத்திற்கு வந்து அருள் பெற்றுச் செல்கின்றனர் என்பதுஒருமகிழ்ச்சிக்குரியசெய்தியாகும்.
வினாயகப் பெருமானின் அருளாடல் 10.12.2022 அன்று மாலையில் இத்திருத்தலத்தில் நடைபெற்ற பிள்ளையார் கதை திருவிழாவில் எனக்கும் குடும்பத்தாருடன் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக கார்த்திகை தீபத்திற்கு அடுத்த நாள் இத்தலத்தில் வினாயகர் சிறப்பு பூஜை ஆரம்பித்து, மார்கழி வளர்பிறை சஷ்டியாம் 21 ஆம் நாளன்று முடிவடைகின்றது. இத்தினங்களில் வினாயகருக்கு விரதம் இருந்து வினாயகரை வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறுகின்றது. மார்கழி வளர்பிறை பஞ்சமிதிதியில் கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்து சஷ்டி திதியில் வினாயகர் விரதம் முடிக்கப்படுகின்றது. இதுவே வினாயகர் சஷ்டி என்று கூறப்படுகின்றது.
இத்திருத்தலத்தில் 21 நாட்களும் பிள்ளையார் பெருங்கதையில் சிறப்பு பூஜைகள் காலை மாலை இருவேளைகளும் நடைபெறுகிறது. 27.12.2022 அன்று மாலையில் கஜமுகாசுரன் போர் திருவிழா நடைபெறவிருக்கின்றது. கந்தனுக்கு கந்த சஷ்டி போல் இங்கு வினாயகருக்கு வினாயகர் சஷ்டியாக கடைபிடிக்கப்படுகின்றது. இதுவே கஜமுகஅசுரன் சம்ஹாரம் என்று கூறப்படுகின்றது. 28.12.2022 அன்று சஷ்டி திதியில் காலையில் சங்காபிசேகம் செய்யப்பட்டு திருவிழா பூர்த்தியடையும்.
இத்திருத்தலத்தில் நாம் முக்கிய மூலவர் சன்னதியில் வினாயகப் பெருமானை வணங்குவதோடு, எம்பெநருமான் அகிலாண்டேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, இராமர், சீதாலட்சுமி, இலட்சுமணன், அனுமன், அய்யப்பன், நடராஜர் ஆகிய அருள்மிகு தெய்வங்களை வணங்கிச் செல்ல மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பிரதிமாதம் வெள்ளிக்கிழமை தோறும் பிள்ளையாருக்கு சிறப்புபூஜையும் அம்மனுக்கு இலலிதா சகஸ்ஹரநாம அர்ச்சனையும் நடைபெறும். மேலும் சுக்லசதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி சஷ்டி, பிரதோசம், பௌர்ணமி, கார்த்திகை போன்ற தினங்களில் அந்தந்த தெய்வங்களுக்குரிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக சதுர்த்தி தினங்களில் இரவு வினாயகரின் ஆலய வீதிபவனி நடத்தப்படுகின்றது.
வருடாந்திர நிகழ்வாக வினாயகர் சதுர்த்தி, ஆவணி சதுர்த்தி, ஸ்ரீஆதிகணபதிப் பெருமானின் தேர்திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் தமிழ் வருடப்பிறப்பு, வைகாசிவிசாகம், ஆடி பூரம், நவராத்திரி, கௌரிகாப்பு விரதம், தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி பெருவிழா, கார்த்திகை தீபத் திருவிழா, திருவெம்பாவை, வைகுண்ட ஏகாதேசி, தைபொங்கல், மகாசிவராத்திரி, வசந்தநவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இத்திருத்தலத்தின் குருக்கள் பணியினை பிரகாஷ் பிரதமகுருக்களும் சிவபிரகாச குருக்கள்ளும் கவனித்து வருகின்றார்கள். இத்திருத்தலத்தின் நிர்வாக அறங்காவலர் கனகரத்தினம் பரமநாதன். தொடர்பு கொள்ள தொலைபேசி எண் 02086893466. இத்திருத்தலம் செல்வதற்கு பேருந்து இரயில் வசதிகள் உள்ளன. பேருந்து எண் 130, 198, 250, 450, 50. இத்திருத்தலம் கடைகள் நிறைந்த வீதியில் உள்ளது. திருத்தலத்தில் எண்ணிக்கை குறைந்த வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி மட்டும் உள்ளதால், தங்களது சொந்த வாகனத்தில் திருத்தலத்திற்கு வரும் மெய்யன்பர்கள் விதிகளுக்குட்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது சாலசிறந்தது.
- இலண்டனிலிருந்து தினமலர் வாசகர் ச.பொன்ராஜ்
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.