சுமார் இருநூறு ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர் குளக்கரைச் சாலை அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதி தைப் பூசப் பெரு விழா, ஆயிரமாயிரம் பக்தப் பெருமக்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது.
4 ஆம் தேதி நள்ளிரவில் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில், தலைமை அர்ச்சகர் எஸ். கே. வாசுதேவ பட்டாச்சார்யார் வழிபாடு நடத்தி தண்டாயுதபாணி ஆலயத் தலைமைப் பண்டாரத்திடம் பால் குடம் சமர்ப்பித்து வழியனுப்ப, மங்கல இசை முழங்க பக்தர்கள் பின்தொடர நான்கரை கிலோ மீட்டர் தூரம் புனித பாத யாத்திரை மேற்கொண்டு அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயம் வந்தடைந்தார்.
நகரத்தார் 1859 ஆம் ஆண்டு இவ்வாலயத்தை தோற்றுவித்த போது வேல் மட்டுமே மூலவராகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இன்றும் அது தொடருகிறது.
வைகறையில் கொணரப்பட்ட பால் குட அபிஷேகம் 5 ஆம் தேதி நண்பகல் கடந்தும் தொடர்ந்தது.பாலாறு ஓடிற்று எனலாம். கோவிட் பெருந்தொற்று காரணமாக ஈராண்டு இடைவெளிக்குப் பின் நடைபெறும் விழாவானதால் உற்சாகம் பொங்க பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர்
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 13002 பால் குடங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் 180 அலகுக் காவடிகள், 34 ரதக் காவடிகள், 216 பால் காவடிகள், 26 தொட்டில் காவடிகள் சமர்ப்பிக்கப்பட்டன.
முத்தாய்ப்பு நிகழ்வாக சிங்கப்பூர் மனித வள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் தமது சகாக்களுடன் பால் குடமேந்தி ஸ்ரீ ஸ்ரீ நிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு பயபக்தியோடு தண்டாயுதபாணி ஆலயம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
சிங்கப்பூர் பிரதமர் தமது முக நூலில் குறிப்பிட்டுள்ளதைப் போல இவ் விழா மத, இனம் கடந்த பக்திப் பெரு விழாவாகத் திகழ்ந்தது.
வழிநெடுக பக்தர்களுக்கு சிற்றுண்டி, தண்ணீர், மருத்துவ வசதி செய்யப்பட்டிருந்தது.
தண்டாயுதபாணி ஆலய சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் எவ்வித இடையூறும் இன்றி ஆலய கார்பார் சண்முகம் எதிர்வரும் ஆண்டு கார்பார் சாமிநாதன் ஒத்துழைப்போடு தொண்டூழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பக்தப் பெருமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தனர்
மாலையில் மழை குறுக்கிட்ட போதும் குன்றாத பக்தியோடு பக்தர்கள் குழுமினர்.
சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்தும், உடல் முழுவதும் அலகு குத்தி, தேர் இழுத்த காட்சியும் மெய் சிலிர்க்க வைத்தன. சுருங்க கூறினால் சிங்கப்பூர் விழாக் கோலம் பூண்டது எனலாம்.
- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.