கொரியாவில் புகழ் பெற்ற புசான் பன்னாட்டு ஒத்துழைப்பு நிறுவனமானது, புசான் திரைப்பட விழா நிறுவன வளாகத்தில், புசான் பன்னாட்டு கலை விழா -2023 என்ற நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்வில், கொரிய தமிழ்ச் சங்கமானது கலை பண்பாட்டு அரங்கை அமைத்து, திருக்குறள், திருவாசகம், பாரதியார் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் உள்ளிட்ட தமிழ்ப் புத்தகங்கள், தஞ்சாவூர் பொம்மைகள், மருதாணி இடுதல், பறை, புல்லாங்குழல், வேட்டி, சேலை உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தியது.
தஞ்சாவூர் பொம்மைகளை கலையார்வம் கொண்ட கொரிய மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். அரங்கில் பரிமாறப்பட்ட தேநீர், குளிர்பானம் (சர்பத்), இட்லி, தோசை, பரோட்டா, பிரியாணி மற்றும் வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு கொரிய மக்கள் உட்பட பன்னாட்டு சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது
அரங்கத்தை சங்கத்தின் கலை பண்பாட்டு அணியைய்ச் சேர்ந்த வைஷ்ணவி, லட்சுமி பிரியா, விவேகானந்தன், அபர்ணா, புவனா, விஷ்ணு உள்ளிட்டோர் அமைத்து வழிநடத்தினர். தேவையான ஓவியங்களை விபின், ஜஜியோ, விவேக் ஆகியோர் வரைய, முத்துசாமி ஆனந்த் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு ஆகியவற்றை செய்தார்.
முன்னரே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், நிறுவனக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட பத்து நாடுகளின் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே அரங்கத்தின் மேடையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவின் சார்பில் கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலைக்குழுவும்-புசான் தேசிய பல்கலைக்கழக இந்திய மாணவர்களும் ஒருங்கிணைத்த நடன நிகழ்ச்சி தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பரதநாட்டியம், நாட்டுப்புற மற்றும் இந்திய மொழிகளின் கோர்வையில் திரையிசை நடனங்கள் அங்கு கூடியிருந்த மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிறநாட்டு தொழில்முறை கலைஞர்களுடன் போட்டியிட்ட நமது தன்னார்வ குழு மூன்றாம் பரிசை வென்றது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் மரகதமணியின் திரைப்படப் பாடல்களின் இசைக்கு ஏற்றவாறு கலைக்குழு உறுப்பினர்கள் நடனமாடி பரிசு பெற்றது உள்ளபடியே கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றால் அது மிகையாகாது.
சங்கத்தின் இணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் கலைக்குழு உறுப்பினர்கள் பத்மப் பிரியா, அருணா, கீர்த்தனா, ஹரிவேந்தன் ரகுபதி, மெய்யப்பன் சங்கர் ஆகியோரால் கலை நிகழ்ச்சி செவ்வனே கொண்டு செல்லப்பட்டது. ஆடை அணிகலன் போட்டியில் ஹரிவேந்தன் ரகுபதி இரண்டாம் பரிசை தட்டிச் சென்றார். நிகழ்வினை கண்டுகளிக்க ஏறக்குறைய 3000 பேர் புசான் உட்பட கொரியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். பூசான்வாழ் தமிழ் மக்கள் அரங்கிற்கு வந்து நமக்கு ஆதரவு அளித்தனர்.
தமிழ் சங்கத்தின் பணிகளை கொரியாவில் பல்வேறு இடங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு எடுத்து செல்லும் தலைவரின் பணிகளில் மிக சீரிய முயற்சியின் வெற்றி இந்த முயற்சி. .கொரியா புசான் நகரில் நடக்கும் முதல் தமிழ் சங்க ஒருங்கிணைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் பொருளாளர் முத்துசாமி, ஜெரோம் உள்ளிட்டோர் உரிய பொருளாதார உதவி தொடர்பான ஏற்பாடுகளை செய்தனர். சங்கத்தின் செயலாளர் சரணவன் அரங்கம் மற்றும் நிகழ்வு மேலாண்மையை திற்பட செய்ய தலைவர் அரவிந்த ராஜா ஆட்புல ஒருங்கிணைப்பு, போக்குவரத்து மேலாண்மை, உடனடி உதவிகள் உள்ளிட்ட பணிகளை செய்தார். துணைத்தலைவர் விஜயலட்சுமி தகவல் மேலாண்மையையும், இணைச்செயலாளர்கள் சம்பத், பாரதி, சிவா, பாலாஜி, மற்றும் ராஜா மணிகண்டன் உள்ளிட்டோர் அரங்க நிர்வாகம், வரவேற்பு உள்ளிட்ட பணிகளை செய்தனர்.
சங்கத்தின் கலைக்குழுவிற்கு விதையிட்ட மூத்த உறுப்பினர்களான வெங்கடேசன், கருணாகரன், சரண்யா, இராமசுந்தரம், தற்போதைய தலைவர் அரவிந்த ராஜா மற்றும் ஏனைய நிர்வாகிகளின் உழைப்பு, முயற்சி, திட்டமிடுதலால், கொரிய தமிழ்ச் சங்கமானது சர்வேதச மேடையை அடைந்துள்ளது, கொரியாவாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியையும் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.