புற்றுநோய்க்கு காரணம் உப்பா?
அதிகளவில் ஏற்படும் புற்று நோய் வகைகளில் ஐந்தாம் இடத்தில் இருப்பது இரைப்பைப் புற்றுநோய்.
கிழக்காசிய நாடுகளில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டு வந்த இந்தப் புற்றுநோய் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளிலும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 50 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இந்நோய் அதிகரித்து வருவதால், இதுகுறித்த ஆய்வில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த வியன்னா பல்கலை இறங்கியது.
உணவில் அதிகப்படியான உப்பைச் சேர்ப்பது டிமென்ஷியா, டைப்-2 நீரிழிவு ஆகியவற்றை அதிகரிக்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில ஆய்வுகளில் அதிக உப்பு இரைப்பையில் உள்ள பாதுகாப்புப் படலத்தைச் சேதமாக்குவதாகவும், புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளன.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உப்பை குறைவாகச் சேர்ப்பவர்கள், மிதமாகச் சேர்ப்பவர்கள், அதிகம் சேர்ப்பவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.
ஆய்வின் இறுதியில் அதிகமான உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்குப் பிறரை விட இரைப்பைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, 41 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
உணவில் சேர்க்கப்பட வேண்டிய பாதுகாப்பான உப்பு அளவு என்ன என்பது குறித்துப் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.