மாரடைப்பு அறிகுறிகளை குழந்தைகளிடம் கண்டால் அலட்சியம் கூடாது !

குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் இறப்புகள், அனைத்தும் மாரடைப்பால் ஏற்படுவதல்ல. இதய கோளாறு சார்ந்த அறிகுறிகளை, அலட்சியமாக விட்டதன் விளைவுகளே என, இதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ரத்த குழாய் ஒரே மாதிரி அல்லாமல், வேறுபாடுகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் திடீர் மரணம் வரலாம்.

தவிர, இருதய தசைகளின் தடிமன், லாங் க்யூட்டி சிண்ட்ரோம், மயோர்கார்டிடிஸ், பிருகடா சிண்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்கும் இதுபோன்று திடீர் மாரடைப்பு வரலாம்.

குறிப்பாக, சாதாரண வைரஸ் காய்ச்சல் சில நேரங்களில் இதய தசையை பாதித்து ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும்.

இதனை, 'மயோர்கார்டிடிஸ்' என்று கூறுகின்றோம். இதய பாதிப்பு இருப்பின் சில அறிகுறிகள் தென்படும். அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும்.

இதய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, லேசான நெஞ்சுவலி, தலைச்சுற்று, இதய படபடப்பு, விளையாட்டுக்களில் ஈடுபட்டால் அதிக மூச்சுத்திணறல், படி ஏறுவதில் சிரமம் இருக்கும்.

அதே போன்று, பரம்பரையில் சிறு வயதில் திடீர் மாரடைப்பு யாருக்கேனும் ஏற்பட்டு இருப்பின், குழந்தைகளுக்கும் அப்பாதிப்பு இருக்க வாய்ப்புகள் உண்டு.