அதிக வெப்பம்... அதிக புரதச்சத்து உணவை தவிர்க்க அறிவுறுத்தும் பொது சுகாதாரத்துறை
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், வரும் நாட்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் பாதிப்புகளில் இருந்து, பொதுமக்கள் தற்காத்துக் கொள்வது குறித்து, பொது சுகாதாரத் துறை சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவற்றை குறித்து அறிந்துக் கொள்வோம்.
வறட்சியான சருமம், குமட்டல், வாந்தி, கடுமையான தலைவலி, சோர்வு, கால் பிடிப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சு படப்படப்பு, தலைசுற்றல் ஆகியவை இருந்தால் அலட்சியம் காட்டா வேண்டாம்.
உடனடியாக, தண்ணீர் குடிக்க வேண்டும். ஓய்வு அவசியம். குளிர்ச்சியான பகுதிக்கு செல்ல வேண்டும். முடிந்தால் குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்.
செயற்கை குளிர்பானங்கள், காபி, டீ, மது அருந்தாதீர். அதிக புரதச்சத்து உணவு மற்றும் காலாவதியான உணவுகளை தவிர்க்கவும்.
கால் சதைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், மயக்க நிலை போன்றவை இருந்தால், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, மருத்துவமனையில் சேர வேண்டும்.
நண்பகலில் கடுமையான பணிகள் செய்யாதீர். வீட்டில் வெப்பத்தில் சமைப்பதை தவிருங்கள்.
மதிய நேரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள், செல்லப்பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம்.
கோடை வெயிலில் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருப்போர், அவரை குளிர்ந்த இடம் அல்லது காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று, படுக்க வைக்க வேண்டும்.
அவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும். அவருக்கு விசிறி விடுவதுடன், குளிர்ந்த நீரை பருக கொடுத்து, ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.