'என்ன தான் நடக்குது என தெரியவில்லையே...' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் நடவடிக்கைகளை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளனர், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள்.
மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவரானதில்இருந்து, கட்சியில் பெரிய அளவில் எந்த மாற்றமும் தென்படாவிட்டாலும், சிறிய மாற்றங்கள் தென்படுவதை பார்க்க முடிகிறது.
ராகுல், சோனியா போன்றோர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த போது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில், கடைசி நேரம் வரை, 'சஸ்பென்ஸ்' நிலவும்; கடைசி நேரத்தில் தான் வேட்பாளர்பட்டியலை காங்கிரஸ் மேலிடம் டில்லியில் இருந்து அறிவிக்கும்.
ஆனால், கார்கே தலைவரானதும், வேட்பாளர் பட்டியல் உடனுக்குடன் வெளியிடப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கானவேட்பாளர் அறிவிப்பை, இதற்கு உதாரணமாக கூறலாம். அடுத்ததாக, கட்சியின் பொதுச்செயலரும்,செய்தி தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷின் நடவடிக்கைகள் சமீப காலமாக வேகமெடுத்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு நிகழ்விலும், அவரதுநடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது என, பம்பரமாக சுழல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.
'இதன் பின்னணியில், கார்கே தான் இருக்கிறார். ஏதோ ஒரு திட்டத்துடன் தான் செயல்படுகிறார்...' என, காங்கிரசில் உள்ள ராகுலின் ஆதரவாளர்கள் சந்தேகப்படுகின்றனர்.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயாகத் தான் தெரியும்...' என கிண்டலடிக்கின்றனர், கார்கே ஆதரவாளர்கள்.