'வேறு ஆள் கிடைக்கவில்லையா?'
'முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என, பா.ஜ., தலைமை முடிவு செய்து விட்டது போலிருக்கிறது...' என, மேற்கு வங்க மாநில அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகள்ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மூன்றாவது இடத்துக்கு தள்ளியதில், பா.ஜ.,வுக்கு பெரும் பங்கு உண்டு.
இப்போது சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ., அடுத்த லோக்சபா தேர்தலிலும், அதற்கு அடுத்து நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றியை ருசிக்க தயாராகி வருகிறது.
சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள், மேற்கு வங்க மாநில பா.ஜ.,வில் இருந்தாலும், மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் யாரும் அங்கு இல்லை.
திரிணமுல் காங்கிரசின் பெரும்பாலான எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சினிமா நட்சத்திரங்கள் தான். இந்த வியூகத்தை, பா.ஜ.,வும் பின்பற்ற தயாராகி வருகிறது.
ராஜ்யசபாவின் முன்னாள் எம்.பி.,யான, பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை வரும் லோக்சபா தேர்தலில், மாநிலம் முழுதும் பிரசாரம் செய்ய வைக்கும் வியூகம் தயாராகி வருகிறது.
மிதுன் சக்ரவர்த்திக்கு மேற்கு வங்கம் தான் சொந்த மாநிலம் என்பதால், அவரும் உற்சாகமாககளம் இறங்க முடிவு செய்துள்ளார். எதிர்க்கட்சியினரோ, 'மிதுனுக்கு, 72 வயதாகி விட்டது. பா.ஜ.,வுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா...' என, கிண்டலடிக்கின்றனர்.