1மருத்துவமனைக்கு இதுவரை சென்றதில்லை!
பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளது பற்றி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் வசிக்கும்,
103 வயது பாப்பம்மாள்: தந்தை மருதாச்சலம் முதலியார் - தாய் வேலம்மாள். 1915ம் ஆண்டு நான் பிறந்தேன். என்னுடன் பிறந்தது நஞ்சம்மாள், பழனியம்மாள் என, இரு சகோதரிகள். சிறு வயதிலேயே தாய், தந்தையை நான் இழந்து விட்டேன். எங்கள் மூவரையும் எங்கள் பாட்டி, தேக்கம்பட்டி அழைத்து வந்தார். இங்கு அவர் மளிகைக்கடை நடத்தி வந்தார். எங்கள் மூவருக்கும் இந்த மளிகைக் கடை தான் சாப்பாடு போட்டது.பாட்டி இறந்ததும் நானே கடையை பார்த்துக் கொண்டேன். என் கணவருடன் சேர்ந்து, இந்த கிராமத்தில் ஓட்டல் துவக்கி நடத்தி வந்தோம். அவர், 1992ல் இறந்ததும், ஓட்டலை மூடி விட்டு, கையில் இருந்த பணத்தை வைத்து, இங்கேயே விவசாயம் செய்ய முடிவு செய்தேன்.பவானி ஆற்றின் கரையில், 2.5 ஏக்கர் விவசாய நிலம் வாங்கி அதில் அவரை, துவரை, பச்சைப் பயறு, வாழை பயிரிட்டு வந்தேன். விவசாய பணிகளுக்கு என் சகோதரிகளும், உறவினர்களும் உதவியாக இருந்தனர்.
சகோதரிகள் இறந்ததும், அவர்களின் மகள்களுடன் நான் வசிக்கிறேன். இப்போதும் விவசாய பணிகளை ஆர்வமாக செய்கிறேன். அதை அறிந்த தமிழக அரசு எனக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.பத்து வருஷத்துக்கு முன் வரை, காலை உணவாக சத்து நிறைந்த கம்பு, ராகி, சோளம் ஆகியவற்றை மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்தேன். மதிய உணவாக கம்பங்களி, ராகி களி, கீரை வகைகள் சாப்பிடுவேன். இரவில், கொள்ளு, அவரை போன்ற தானிய வகைகளை உணவாக எடுத்துக் கொள்வேன். இப்போது வயது அதிகரித்து விட்டதால், அளவாக ஏதாவது ஓர் உணவை மட்டும் சாப்பிடுகிறேன். அப்போ நன்றாக சாப்பிடும் போது, அசைவ உணவுகளில் ஆட்டுக்கறி, பிரியாணி போன்றவற்றை விரும்பி சாப்பிடுவது வழக்கம். நான் சின்னவளாக இருந்த போது, எங்கள் ஊரில் பள்ளி கிடையாது. அங்குள்ள சத்திரம் ஒன்றில், எழுதிப் பழகினேன். வீட்டு வேலை, விவசாய வேலைகளை தொடர்ந்து செய்து வந்ததால், எந்த நோயும் என்னை அண்டவில்லை. அப்படியே அவ்வப்போது சிறிய பிரச்னைகள் வந்தாலும், கைப்பக்குவமாக பார்த்துக் கொள்வேன். வயிற்று வலி வந்தால், வெற்றிலையில் உப்பு வைத்து சாப்பிடுவேன்; சரியாகி விடும். தலைவலி வந்தால், கொட்டைப் பாக்கை அரைத்து நெற்றியில் பற்று போடுவேன்; சரியாகி விடும். பத்மஸ்ரீ விருது கிடைத்ததும், இந்த கிராமத்து மக்கள் அனைவரும் வந்து என்னை பாராட்டினர். நான் எல்லா வீடுகளுக்கும் செல்வேன். அதுபோல, இந்த ஊர் மக்கள் அனைவரும் நல்லது, கெட்டது அனைத்திற்கும் என் வீட்டுக்கு வருவர்; நானும் செல்வேன். இந்த விருது எனக்கு மட்டும் கிடைத்த விருதாக நினைக்கவில்லை; தேக்கம்பட்டி கிராமத்து மக்களுக்கு கிடைத்த விருதாக கருதுகிறேன்!