எறும்பினத்திற்கு கூட மிச்சம் வைக்காமல், கோவில் பொங்கலை ரசித்து சாப்பிடும் நம்மில் பலருக்கு, பொங்கலை தாங்கியிருக்கும் தையிலையைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மந்தாரை இலையின் குடும்பம்தான் இந்த தையிலை. 'தையிலையில் சாப்பிடுவதால், இலையில் உள்ள சத்துக்களும் நம் உடலுக்குள் செல்லும்' என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை! ஆக, 'தையிலையில் சாப்பிடுவதே நலம்' எனும்போது, அந்த இலையையே உணவாக சாப்பிட்டால்...
செய்முறை:
ஆய்ந்து வைத்திருக்கும் மந்தாரை இலை, பூ மற்றும் கொத்தமல்லியை எடுத்து, ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும். இன்னொரு கடாயில், உளுத்தம் பருப்பை இட்டு, அது பொன் நிறமாகும் வரை வறுக்கவும். பிறகு, காய்ந்த மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடைசியாக, கடுகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, தயார் செய்து வைத்திருக்கும் கலவைகளை சேர்த்தால், நலம் தரும் 'மந்தாரை துவையல்' தயார்.
பலன்கள்:
மந்தாரை இலையில் உள்ள நார்ச்சத்து மற்றும் கெரட்டின், ஆஸ்துமா, மலச்சிக்கல், ரத்தமூலம், சீதபேதி, நீரிழிவு உள்ளிட்ட வியாதிகளை தீர்க்கும்; உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், உடலை சீரான எடையில் வைத்திருக்க விரும்புபவர்களும், மந்தாரை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்!
- காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்.