நம் வயது என்னவானாலும் ஆரோக்கியமான உணவு உண்ணுவது முக்கியம். நீங்கள் ஆரோக்கியமான உணவு உண்ணும் பட்சத்தில், நோய்நொடி இல்லாமல் வாழலாம். அந்த வகையில், அரிசி பொங்கலே ஒரு ஆரோக்கியமான உணவு தான். அதிலும் குறுதானியமான திணைப் பொங்கல் சாப்பிட்டால், கூடுதல் ஆரோக்கியம்.
திணை 1 கப்
பச்சைப்பயறு 1 கப்
நெய் தேவையான அளவு
மிளகு20
சீரகம் 2 தேக்கரண்டி
இஞ்சி சிறிதளவு
முந்திரி 10
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
திணை மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி, ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு குக்கரில் ஆறு டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்றாக குழைய வேகவைக்க வேண்டும். பின்பு வாணலியில் தேவையான அளவு நெய் விட்டு, கடுகு, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை போட்டு தாளித்து அதை வேகவைத்த திணையுடன் சேர்த்து கிளறவேண்டும். மீண்டும் தனியாக ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து தாளித்து வைத்துள்ள கலவையில் கொட்டி கிளறினால் கமகமக்கும் திணை பச்சைப்பயறு பொங்கல் ரெடி!
பலன்கள்:
மார்கழி மாதம் என்பது குளிர்காலம். இந்நேரத்தில் திணையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும். திணையில் கரோட்டின், புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் 'பி' பாஸ்பரஸ் போன்றது உள்ளது. இதயத்தை பலப்படுத்துகிறது. பச்சைப்பயறு உடலுக்கு குளுமையை தருகிறது. திணையோடு சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பயன் தரும்.
- காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்.