தாய்ப்பால் என்பது, ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய, இயந்திரத்தனமான வாழ்வில், தாய்ப்பாலின் வாயிலாக முழுமையான சத்துக்கள், குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.
மூன்று வயது வரை நல்ல உணவோடு தாய்ப்பாலும் கொடுக்கலாம் என்றாலும், குழந்தைக்கு ஒரு வயது வரை தாய்ப்பால் கிடைத்தாலே அதிர்ஷ்டம் எனக்கூற வேண்டியுள்ளது. தாய்ப்பாலை சட்டென நிறுத்தவும் முடியாது. குழந்தை அழும். அடம்பிடிக்கும்; ஏங்கும்.
எனவே, உணவின் அளவை சற்று கூட்டுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் எண்ணிக்கையையும் அளவையும் குறையுங்கள். விளையாட்டில் கவனத்தை திருப்புங்கள். இக்கால கட்டத்தில் விளையாட்டே, குழந்தைக்கு முக்கியமாக இருப்பதால், எளிதில் தாய்ப்பாலை மறந்து விடும்.
அடிக்கவோ கடும் சொல் கூறவோ செய்யாதீர்கள். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு, பசும்பால் வேண்டாம்.
ஏனெனில் ஒரு வயது வரை குழந்தைக்கு, பசும்பாலை செரிக்கும் திறன் மிகவும் குறைந்தது. அலர்ஜி, ரத்த சோகை, வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்றவை, ஒரு வயதுக்குள் பசும்பால் கொடுக்கும் பொழுது ஏற்படலாம்.
ஒரு வயதுக்கு பிறகு, குழந்தைக்கு, 100 மில்லி முதல் சிறிது சிறிதாக பசும்பால் கொடுக்கலாம். பசும்பாலில் நல்ல புரதம், லாக்டோஸ், வைட்டமின் பி வகைகள், ஏ,டி, சிங்க் போன்றவை உள்ளன. குழந்தை வளரும் பொழுது இவை தேவைப்படுகின்றன. இதனை ஒரு வயதுக்குப் பிறகு கூட்டிக் கொண்டே வரலாம்.
ஒரு சிறந்த தாயால் தாய்ப்பாலை நிறுத்துவது கடினம்தான். இவர்கள் இரண்டு வயது வரை கூட பால் கொடுப்பர்.