காதுகளைப் பொறுத்தவரை, காது கேளாமை, காதடைப்பு இரண்டும் தான் காலம் காலமாக இருந்து வரும் பிரச்னை. காது கேளாமை பிறவியிலேயே வரலாம். கர்ப்ப காலத்தில், தாய், அதிகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் உட்கொண்டிருந்தால், பிறக்கும் குழந்தைக்கு காது கோளாறுகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
ஈ.என்.டி. பிரச்னைகளை சமாளிப்பது எப்படி?
காது: காது வலி தனியாக வருவதில்லை. சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும் போது, காதுவலி, காதடைப்பு மற்றும் சீழ் வடிதல் ஏற்படும். மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுக்கு செல்லும் யுஷ்டெசியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, நோய் தொற்று உண்டாவதே காரணம். சளி இல்லாத போதும் கூட, குழந்தைகளுக்கு தாங்க முடியாத காது வலி உண்டாகலாம். பெற்றோர் அடிக்கடி குழந்தைகளின் காதை சுத்தம் செய்வதால் ஏற்படும் எழுச்சி எனப்படும் கட்டியால், காதுவலி ஏற்படலாம்.
குழந்தைகளின் காது சவ்வு மிகவும் சன்னமாகவும் மிருதுவாகவும் இருக்கும். அதிக சத்தமும் குழந்தைகளின் காதுக்கு எதிரிதான். அதிக காய்ச்சலாலும் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறையக்கூடும். காது வலிக்கிறது என்பதற்காக எண்ணெய் காய்ச்சி ஊற்றுவது தவறு.
மூக்கு: பள்ளி செல்லும் குழந்தைகளும், வீடருகே விளையாடும் குழந்தைகளும், புறச்சூழல் காரணமாக அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றுக்கு ஆளாவர். சளி தொல்லையால் அவதிப்படுவர். மூக்கடைப்பு,
நீர்வடிதல் போன்ற பிரச்னைகளால் சாப்பிடும் உணவை விழுங்க முடியாமல் தவிப்பர். தூங்கும் போதும் மூக்கடைப்பு ஏற்படுவதால், வாயால் மூச்சு விடுவார்கள். தொண்டை வறண்டு அடிக்கடி தாகம் எடுக்கும். அதனால் போதுமான தூக்கமும், உணவும் இல்லாமல் சோர்ந்து காணப்படுவர். சளி, நடுத்தண்டுவட வளைவு, சதை வீக்கம் மற்றும் அடினாய்டு போன்ற தொல்லைகளால் மூக்கடைப்பு உருவாகி மூச்சு விட சிரமப்படுவர். சில குழந்தைகளுக்கு சில்லி மூக்கு உடைதல் பிரச்னை ஏற்படலாம். பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது எங்காவது இடித்துக்கொண்டு மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வெளிப்படும். அதிக வெப்பம், வேதிப்பொருள், அடிக்கடி சளிப்பிடித்தல், குழந்தைகள் விரலால் மூக்கை நோண்டுதல் ஆகிய காரணங்களால் மூக்கின் சிறு ரத்தக்குழாய்களில் ரத்தம் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக கையாள வேண்டும்.
தொண்டை: தொண்டையில் ஏற்பட்ட வலியால் குழந்தை எச்சிலை விழுங்கக்கூட சிரமப்படும். டான்சில் கட்டி இன்பெக்ஷனால் காய்ச்சல் ஏற்படலாம். முறையாக பதப்படுத்தப்படாத உணவுகள், குளிர்பானங்களை உட்கொள்வதாலும் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும். சாலையோர குளிர்பானம், கரும்புச்சாறு, பழச்சாறு ஆகியவற்றில் கிருமி இருந்தால் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு தொந்தரவு செய்யும். தொண்டையில் சிறு பிரச்னை என்றால், மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.