விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் போன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் ஜீரணமாகுமா? நெஞ்சு கரிக்குமா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம்.
இந்த பித்தம் தொடர்பான பிரச்னைகளையும், அதனை போக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் பார்ப்போம்.
இஞ்சித் துண்டை தேனில் ஊற வைத்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறில் தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து, அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆற வைத்து, சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள், காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும். ரோஜாப்பூ கஷாயத்தில், பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
பொன்னவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால், பித்தக்கோளாறுகள் அகலும். பனங்கிழங்கு சாப்பிட்டால்
பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
கமலா ஆரஞ்சு சாப்பிட்டால், உடல் உஷ்ணத்தை தணிக்கும். நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி, கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும். எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி, சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால், ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவினால், வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும்.