மூன்றில் ஒரு பங்கு உணவு, மூன்றில் ஒரு பங்கு தண்ணீர், மூன்றில் ஒரு பங்கு வெற்றிடம் என்ற அடிப்படையில் தான், நாம் வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும் என, நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
இதனைக் கடைப்பிடிக்காத பட்சத்தில்தான் நோய்கள் நம்மை எட்டிப்பார்க்கத் துவங்குகின்றன. அதிலும், தவறான உணவு பழக்க வழக்கத்தால் வரும் பல நோய்களில், இருதய நோய் முக்கியமானது. பெரும்பாலும் இருதய நோய், கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளால் தான் வருகிறது.
உதாரணமாக, ஆட்டிறைச்சி சமைக்கும் போது எண்ணெயில் திரளும் கொழுப்பு, முற்றிலும் ஆபத்தானது. ஆட்டிறைச்சியை நன்றாக வேகவைத்து சமைப்பதால், அதில் இருக்கும் அளவுக்கதிகமான கொழுப்பை குறைக்க முடியும். அடிக்கடி பொரித்து, வதக்கி சாப்பிடுவதையும் நிறுத்தி கொள்ளுங்கள்.
ஒரு முறை பொரியலுக்காக பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அளவுக்கு மீறி பட்டர், மாஜரின் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெண்ணெய் மற்றும் கேக் போன்ற இனிப்புகளை வாங்கும் போதும், தயாரிக்கும் போதும் முடிந்தளவுக்கு, கொழுப்பு தன்மையான சேர்மானங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
பச்சை மரக்கறி வகைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள், பருப்பு வகைகளில் அதிகமாக காணப்படும் நார்ச்சத்துள்ள உணவுகளை, அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சமைப்பதற்காக தேங்காய் எண்ணெய் உட்பட, வேறு எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும், மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்துங்கள்.
சாப்பிட்ட பின்னர் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். வாழ்க்கை முறையை, இவ்வாறு மாற்றி விட்டாலே, இருதய நோய் உட்பட எந்தவொரு நோயும் நெருங்காது.