கொத்தமல்லி, நம் சமையலில் அதிகம் இடம்பெறும் மூலிகைப் பொருள். வாசனைக்காக மட்டுமே, சேர்க்கப்படுவது அல்ல. வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களுக்காகவும் சேர்த்துதான் சமையலில் சேர்க்கப்படுகிறது.
கொத்தமல்லி குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயு அகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவ பயன்களைக் கொண்டது. கொத்தமல்லி, சுவையின்மையை நீக்கும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு ஜீரணிக்கச் செய்யும். வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து, மலக்குடலில் உள்ள தேவையற்ற கசடுகளை வெளியேற்றும்.
மூலநோயாளிகளுக்கு, இது சிறந்த மருந்தாகும். புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் மாறும். கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி, கண்ணை பலமடையச் செய்யும். கண் சூடு குறையும். சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும். உடலுக்குத் தேவையான சக்திகளை சேமித்து வைத்து, தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடல் பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த, கொத்தமல்லி சிறந்த நிவாரணி.
கொத்தமல்லி, நல்ல தூக்கத்தை தரும். மன அமைதியைக் கொடுக்கும். உடலுக்கு வலுவைக் கொடுக்கும். விந்துவைப் பெருக்கும் குணமும் இதற்குண்டு. ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். ரத்த அழுத்த நோயாளிகள், உணவில் சேர்த்துக்கொண்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாய் நாற்றத்தைப் போக்கும். பல்வலி, ஈறுவீக்கம் குறையும். சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.