வெங்காயம் போன்ற ஒரு சிறந்த இயற்கை மருந்து பொருள் வேறில்லை என்கின்றனர், சித்த மருத்துவர்கள். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து, அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்; பித்த ஏப்பம் மறையும். சமஅளவு வெங்காயச்சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில் விட்டால் காதுவலி குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி, இளம்சூட்டில் காதில் விட்டால், காது இரைச்சல் மறையும்.
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட்டால், எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும். வெங்காய நெடி, சில தலைவலிகளைக்
குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால், உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத (சூட்டுக்)கட்டிகள் மேல் வைத்துக்கட்டினால் கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காயச்சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடித்தால் இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை சமைத்து உண்டால், உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும். வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி, தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினால் மறைந்துவிடும். திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை ககி, முகர வைத்தால் மூர்ச்சை தெளியும்.
வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து, அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும். பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்து வந்தால் மேகநோய் நீங்கும்.
வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து சாப்பிட்டால் மேகநோய் குறையும். வெங்காயம் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.
வெங்காயத்தை உரித்தால், உரித்துக் கொண்டே இருக்கலாம். இதனால் வெங்காயத்தில் எதுவுமே இல்லை என்று நினைப்பது தவறு. வெங்காயத்தில் இல்லாத மருத்துவ பயன்கள், வேறு எதிலும் இல்லை என்பதை, அடித்துக் கூறுகின்றனர் சித்த மருத்துவர்கள்.