நானும், லென்ஸ் மாமாவும், நாகர்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தோம்.
ஒன்றுமே பேசாமல் வண்டியை விரட்டினார், மாமா. எவ்வளவு நேரம் தான் வேடிக்கை பார்ப்பது... லேசாக கண்ணை மூடி, குட்டித் தூக்கம் போடலாம் என்றாலோ, மாமா கத்துவார். டிரைவர் சீட் அருகே அமர்ந்திருப்பவர் தூங்கினால், டிரைவருக்கும் தூக்கம் வரும்; அப்புறம், டமால் தான். இதனால் தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன என்பார்.
'போர்' அடிக்கவே, ரேடியோவை திருப்பினேன். பழைய பல்லவி ஒன்று ஒலிக்க, அதை, 'குளோஸ்' செய்து, 'டேஷ் போர்டில்' கிடந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற, 'சிடி'யை சுழல விட்டேன்.
டென்ஷனாக இருந்த மாமா, சாலமன் பாப்பையா தமாஷ் பேச்சில் லயித்து, சகஜ நிலைக்கு மாறினார்.
'மணி... வள்ளியூர் வந்துருச்சு; இங்கே சரஸ்வதி கபேயில் ரச வடை சூப்பரா இருக்கும். சாப்பிட்டுப் போகலாம்...' என்றவர், சரஸ்வதி கபே வாசலில், வண்டியை நிறுத்தினார்.
'பளபள' வண்டி ஒன்று, தம் ஓட்டல் வாசலில் நிற்பதைக் கண்ட, கல்லாவில் அமர்ந்திருந்த கடை முதலாளி, சிறிது பரபரப்பு அடைந்தார்.
மாமா, அவரிடம், 'ரச வடை இருக்கா...' என கேட்கவும், தன் இடது கைபுறம் இருந்த, 'காலிங் பெல்' பொத்தானை அழுத்தியபடியே, 'இருக்கு சார்... உள்ளே போங்க...' என்றார்.
ஓனர், பெல் அழுத்திய வேகத்திற்கு, சப்ளையர் ஓடி வரவில்லை. ஆடி, அசைந்து வந்தவரிடம், 'ரச வடை ரெண்டு...' என்றார் மாமா.
'ஓசி'யில் சாப்பிட வந்ததைப் போல் நினைத்து, படு அலட்சியமாக, 'இன்னும் ரெடியாகல...' எனக் கூறி திரும்பியவரை, மீண்டும், 'பெல்' அடித்து அழைத்த ஓனர், வாயால் ரெண்டு போடு போட்டு இருப்பார் போலும்... ஓடி வந்த சப்ளையர், 'உக்காருங்க சார்... இப்போ கொண்டு வர்றேன்...' என, உள்ளே சென்றார்.
இந்த வேடிக்கையை கவனித்த லென்ஸ் மாமா, 'இந்த சம்பவத்தை பார்க்கும் போது, ஒரு கதை நினைவுக்கு வருதுப்பா...' என்று ஆரம்பித்தார்...
'ரயில் ஏறிய விருந்தாளி ஒருவர், வழியனுப்ப வந்தவரிடம் குறைபட்டுக் கொண்டார்... 'நான் ரயிலுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்யப் போனேன்... அப்போது சொல்லியிருக்கலாம்; திரும்பி வந்து டிரஸ்சை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன்... அப்போதாவது சொல்லி இருக்கலாம்; ஆனா, நீங்க சொல்லல. அப்புறம் குளித்து, டிரஸ் மாற்றி கிளம்பினேன்; அப்போதும் சொல்லலே; பேசாம இருந்துட்டீங்க. அப்புறம் ஸ்டேஷனுக்கு வர, ஆட்டோ பிடிக்கப் போனேன்... அப்போதும், 'கம்'முன்னு இருந்தீங்க; வாயே தொறக்கலே. அப்புறம், உங்க குடும்பத்திலே எல்லார்கிட்டேயும், 'போய்ட்டு வரேன்'ன்னு சொல்லிட்டு புறப்பட்டேன்; அப்பவும் எதுவும் சொல்லாம, பேசாம இருந்தீங்க. இப்போ, நான் ரயில்ல ஏறி உட்கார்ந்து, கார்டு விசில் ஊதி, பச்சைக் கொடியும் காட்டி, வண்டியும், 'மூவ்' ஆயிருச்சு. இப்பப் போயி, 'இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்'ன்னு சொல்றீங்களே... இது உங்களுக்கே நல்லாயிருக்கா...' என்றானே பார்க்கணும்...' என்றார்.
'பேஷ்...பேஷ்...' என வாய் வார்த்தையால் சொல்லி, 'கெழவா... இதே ஜோக்க, 1001வது முறையா எங்கிட்ட சொல்லிட்டே...' என, நினைத்த படி, ரச வடையை சுவைக்க ஆரம்பித்தேன்.
மேல் அண்ணம் பொத்துக் கொண்டது; அவ்வளவு சூடு!
'நெட்டில்' படித்த செய்தி ஒன்று...
தைவான் நாடு மற்றும் அந்நாட்டு மக்கள் பற்றி அங்கு வாழும் வாசகர் ஒருவர் எழுதியிருந்தார். சுவாரசியமாக இருந்ததால் இதோ, அதைத் தருகிறேன்:
முதலில் நாம் குடிக்கும் குளிர்பானங்களில் உள்ள கெடுதிகள் பற்றி சொல்லி விடுகிறேன்...
வெளிநாட்டில் தோன்றி, நம் நாட்டில் குடி புகுந்துள்ள குளிர் பானத்தில், ஒரு எலும்புத் துண்டைப் போட்டு, ஒரு வாரம் வைத்திருந்தால், எலும்புத் துண்டு முழுவதும் கரைந்து காணாமல் போகக் கூடும். அந்த அளவிற்கு அமிலத்தன்மை அதிகம். குளிர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதில், 'எதிலின் க்ளைகால்' என்ற வேதிப் பொருளை சேர்க்கின்றனர்.
தண்ணீர், நான்கு டிகிரியில் பனிக் கட்டியாகி விடும் என்பது அனைவருக்கும் தெரியும். தண்ணீரில் எதிலின் க்ளைகாலை சேர்ப்பதால் அதன், 'உறை வெப்பம்' மேலும் குறைகிறது. அதாவது, ஒரு சதவீதம் எதிலின் க்ளைகால் சேர்க்கப்பட்ட தண்ணீர், நாலு டிகிரியில் உறையாது; இதே எதிலின் க்ளைகாலை, பியரிலும் சேர்க்கின்றனர்.
இந்தியா போன்ற தரக்கட்டுப்பாடு பேணப்படாத நாடுகளில், மிகப் பெரிய கம்பெனிகள் கூட இவ் விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏனென்றால், நம்மூரில் உயிரின் விலை மலிவு தானே! அதற்காக பைவ் ஸ்டார் ஓட்டலில் இளநீரும், எலுமிச்சை சாறும் குடிக்க முடியுமா என்று உங்கள் கிளப் நண்பர்கள் வருத்தப்படலாம். எனவே, இந்த வியாக்யானத்திற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
நான், தைவானுக்கு வந்த புதிதில், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் கிடைக்காமல் அல்லாடியிருக்கிறேன். இப்போதெல்லாம் என் குடும்பம் இந்தியா வந்து விட்டால், சைனீசாக மாறி விடுகிறோம். வேக வைத்த காய்கறிகள் தான் தினமும். பெயருக்குத் தான் தைவானில் புத்த மதம்; ஆனால், அனைவரும் மூன்று வேளையும் பன்றி கறியை வெளுத்து வாங்குகின்றனர்.
இங்கு, இந்தியர்களுக்கு நல்ல மரியாதை; அதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தியா புத்தமதம் தோன்றிய புண்ணிய பூமி; மற்றொன்று, இங்குள்ள இந்தியர்கள் பெரும்பாலும் விஞ்ஞானிகள் அல்லது வியாபாரிகள்; நிறைய குஜராத்திகளும், சிந்திகளும் வியாபாரத் துறையில் இருக்கின்றனர்.
நான் வேலை பார்க்கும் விஞ்ஞானக் கழகத்தில் மட்டும், 7,080 இந்தியர்கள். அதிலும், தமிழர்கள் எண்ணிக்கை கணிசமானது; குறைந்தது, 30 தமிழர்கள் இங்கே குப்பை கொட்டுகிறோம்.
இங்கு அதிகம் உள்ள மற்ற நாட்டவரான, இந்தோனேசியர்கள், தாய்லாந்துக்காரர்கள், பிலிப்பைன்ஸ்காரர்கள் எல்லாம் கூலி வேலை செய்பவராகவும், வீட்டுப் பணியாளர்களாகவும் தான் இருக்கின்றனர்.
வீட்டுக்கு வீடு, குடிசைத் தொழில் மாதிரி கணிப்பொறி உதிரி பாகங்கள் செய்கின்றனர். அனைவருக்கும் கணிப்பொறி ஹார்ட்வேர் - கடின பொருள் வடிவமைப்பது பற்றி நன்கு தெரிந்துள்ளது.
இங்கு பெரும்பாலும், பெண்கள் தான் வீட்டு உரிமையாளர். அதனால், அவர்கள் கட்டுப்பாட்டில் தான் அனைத்தும் உள்ளது. நம்மூரில் தகப்பனார் சொத்து, ஆண் வாரிசுக்குப் போய்ச் சேருவதைப் போல், இங்கே, மூதாதையர் சொத்து பெண்களுக்குத்தான் என்பதால், அனைவரும் பெண் குழந்தைகளையே விரும்புகின்றனர்.
எல்லாருக்கும் அமெரிக்க மோகம் அதிகம். இவர்களின் முகவெட்டு கவர்ச்சிகரமாக இல்லாததால், இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. குறிப்பாக, பெண் குழந்தைகளை அமெரிக்க மோகம் படாதபாடு படுத்துகிறது. நான் பார்க்கும் இன்றைய தலைமுறை குழந்தைகள் நன்றாகத்தான் இருக்கின்றனர். ஆனாலும், அமெரிக்காவில் படிக்க வேண்டும்; அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும்; அமெரிக்க பாய் பிரண்ட் வேண்டும் என்று தான் இவர்களது கற்பனை விரிகிறது.
சராசரியாக ஒவ்வொருவரும் குறைந்தது மாதம், 50,000 வரை தைவான் டாலர் சம்பாதிக்கின்றனர். இது நம்மூர் பணத்திற்கு, 75 ஆயிரம் ரூபாய். ஒரு வீட்டில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், நிரந்தர சம்பாத்தியம் செய்பவர்களாகத்தான் இருக்கின்றனர். அந்த வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகள் கூட, பகுதி நேர சம்பாத்தியத்தின் மூலம் தங்கள் படிப்பு மற்றும் இத்தியாதி செலவுகளைப் பார்த்துக் கொள்கின்றனர்.
குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவது, இங்கே பண்டிகை காலங்களில் தான். தந்தையர் தினம், தாயார் தினம் என்று வந்தால், அப்பா, அம்மாவைப் பார்க்க ஒரு கூடை பூவுடன் புறப்பட்டு விடுவர்; மற்றபடி, என்றாவது ஒரு நாள், பெற்றோர், பிள்ளைகளுக்கும், பிள்ளைகள், பெற்றோருக்கும் விருந்து கொடுப்பது உண்டு. அப்படித் தான் இங்கே உறவு முறை இருந்து வருகிறது.
என், 'பாஸ்' இரவு சாப்பாட்டைக் கூட அலுவலக கேன்டீனில் முடித்துவிட்டு தான் வீட்டிற்குச் செல்வார். இது, நான் இங்கே கண்ட, 'நெகடிவ் பாயின்ட்!'
- படித்து, முடித்ததும் பெருமூச்சு விட்டேன்.