திராட்சையில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இதில் எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. குறிப்பாக, அல்சர் என்ற குடல்புண் நோய்க்கு, திராட்சை அற்புதமான மருந்தாகும்.
காலையில் திராட்சைப்பழச்சாறு குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும், கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுமையாக குணமாகும். தலைச்சுற்றல், மலச்சிக்கல், கை கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை பழமாகவோ, ஜூஸ் ஆகவோ சாப்பிடலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன், ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும். இதே பிரச்னை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் நசுக்கி, சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே, பிரச்னை சரியாகிவிடும்.
வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ள கர்ப்பிணிகள், திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். எடை குறைவாக இருக்கிறவர்களும், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் திராட்சையை சாப்பிடலாம். உலர்ந்த திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. எலும்பு மஜ்ஜைகளிலிருந்து, ரத்தம் ஊறுவதற்கு, காய்ந்த திராட்சை உதவுகிறது. இப்பழத்தை எடுத்து வாயில் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைந்து, ரத்தம் அதிகம் சுரக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான, அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். மாதவிலக்கு காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். இப்பிரச்னை தீர, கைகொடுக்கும் மருந்தாக, உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இப்பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக சாப்பிட்டால் வலி மறைந்து போகும். உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதனை நன்றாக கழுவி விட்டு, அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு, பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்தான், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
உலர்ந்த திராட்சை பழத்தில், சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்கு, இரவு உணவுக்குப் பின் தினமும், 15 முதல் 20 திராட்சை வரை கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்வார்கள். எலும்புகளோடு, பற்களும் உறுதியாக அமையும்.
வாலிப வயது தாண்டி, வயோதிக வயதுக்கு வரும் பொழுது, தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின், சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்த கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடன் இருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள், இரவு உணவுக்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், சத்தான பால்
உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு, கால்கள் வளையாது வளரும். பருவப் பெண்கள் தினமும், 10 உலர் திராட்சை சாப்பிட்டால், முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.