கல்யாண விநாயகர் கோவில் எதிரில், ஒரு நடுத்தரமான வீடு. அந்த வீட்டின் முன்புறம் விசாலமான காலி இடம். அந்த காலியிடத்தில் வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வீட்டை ஒட்டிய இடத்தில், ஒரு தனியார் வங்கியும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் இரு சக்கர வாகனங்கள் தான் அந்த வீட்டின் முன்புற காலியிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக தினமும் யாரிடமாவது உரத்த குரலுடன் சத்தம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தான், பட்டதாரியான சம்பத்குமார்.
அன்றும் அப்படித்தான், வங்கிக்கு வந்த ஒருவர், வேலை முடிந்து, சம்பத்குமார் வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த தன் இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தார். தற்செயலாக வீட்டிற்கு வெளியே வந்த சம்பத்குமார், வேகமாக வந்து இரு சக்கர வாகனத்தை மறித்து நின்றான். வாகன உரிமையாளருக்கு, வயது, 40 இருக்கும்.
அவர், ''என்ன தம்பி... வண்டியை எடுக்க விடாமல், மறித்து நிற்கறே... நீ யார்?'' என்று அமைதியாக தான் கேட்டார்.
''நான் யாரா... இந்த வீட்டுக்கு சொந்தக்காரர். தினமும், எனக்கு இதே வேலையாய் போச்சு... எங்க வீட்டு வாசலை மறித்து, வீட்டுக்கு முன் இப்படி வரிசையாக வண்டியை நிறுத்திடுறாங்க... இது என்ன வாகன காப்பகமா... இதே தொந்தரவா போச்சு, ஏன்ய்யா இங்க வண்டியை நிறுத்தினே?''
''தம்பி... நான், உங்க வீட்டுக்குள்ளே வந்து நிறுத்தியிருப்பது போல கோபப் படறியே... என்னோட வண்டியை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வெளியே தானே நிறுத்தியிருக்கேன்,'' என்று அவர் அமைதியாகவே பதில் சொன்னார்.
''என்னய்யா பேசுறே... எங்க வீட்டுக்கு முன் உள்ள இந்த காலியிடம் எங்களுக்கு சொந்தமானது. நீங்க வீட்டுக்குள்ளே வேறு வந்து நிறுத்துவீங்களா,'' என, மேலும் உரக்க கத்தினான் சம்பத்குமார்.
மேலும், அவனிடம் பேசினால், தனக்கு தான் அவமானம் என அந்த பெரியவர் தனக்குள் நினைத்து, அமைதியாக வண்டியை எடுத்துச் சென்று விட்டார்.
சம்பத்குமாரின் தந்தை சிறு விவசாயி. ஆனால், பெருங்குடும்பம். அவருக்கு சம்பத்குமார் மூத்த மகன் மற்றும் திருமணத்திற்கு காத்திருக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர், தன் மகனை மிகவும் கஷ்டப்பட்டு தான், எம்.காம்., வரை படிக்க வைத்தார். படித்து முடித்தவுடன், வேலைக்கு சென்று, தந்தையின் சுமையைக் குறைக்கலாம் என்று நினைத்திருந்தான், சம்பத்குமார்.
அவன் பட்டப்படிப்பு முடித்து, ஆறு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. பல இடங்களுக்கு விண்ணப்பித்ததில், தனியார் நிறுவனங்களில் வேலைக்காக ஏறி, இறங்கியும் வேலை கிடைக்கவில்லை. அவன் விரக்தி அடைந்ததை பார்த்து, அவனுடைய அப்பா தினமும் ஆறுதல் கூறி வந்தார். இருந்தாலும், விரக்தியின் மிகுதியில், தன் வீட்டு முன் நிறுத்தும் இரு சக்கர வாகனக்காரர்களிடம், அவன் ஏதாவது வம்பிழுத்து, கத்திக்கொண்டே இருப்பான். அப்போதெல்லாம் அவன் தந்தை வந்து, அவனது கோபத்தை தணித்து, சமாதானப்படுத்துவார்.
அன்றும் அப்படித்தான், சம்பத்குமார் வீட்டை விட்டு வாசலுக்கு வரும்போது, ஓர் இளைஞன், தன் இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து சம்பத்குமார் வீட்டு முன் நிறுத்தப் போனான். அப்போது அங்கே வேகமாக வந்த சம்பத்குமார், ''சார்... வண்டியை இங்கே நிறுத்தக் கூடாது,'' எனக் கூறி தடுத்தான்.
அந்த இளைஞரும் மெதுவாக,''சார்... பேங்கில் ஒரு வேலை, பத்து நிமிடத்தில் முடிந்து விடும். உடனே வண்டியை எடுத்துக் கொள்கிறேன்,'' என்றான்.
அவன் கூறியதை, காதில் வாங்கிக் கொள்ளாமல், ''சார்... எங்க வீட்டு முன் வண்டியை நிறுத்தக் கூடாது; இந்த காலியிடம், எங்களுக்கு சொந்தமானது. வண்டியை வேறு எங்கேயாவது கொண்டு போய் நிறுத்துங்கள்,'' என, கத்தினான்.
அந்த இளைஞனுக்கு உடனே கோபம் வந்து விட்டது, ''உங்க காலியிடம்னா, வேலி போட்டு இருக்கணும். வேலி போட்டால் யாரும் இங்க வந்து என்னை மாதிரி வண்டியை நிறுத்த மாட்டாங்க,'' என, அவனும் பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.
''ஆமா... துரைகள் வந்து வண்டியை நிறுத்தக் கூடாதுன்னு, வேலி போடணுமா. மிஸ்டர், அனாவசியமாக பேசாமல், வண்டியை வேறு இடத்தில் நிறுத்துங்கள்,'' என, கத்தினான்.
வாக்குவாதம் அதிகமானதை கண்டு சிறு கூட்டமே கூடி, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர், சம்பத்குமாரை பார்த்து, ''தம்பி... அவர் தான் வண்டியை அரைமணி நேரத்திலே வந்து எடுத்துக் கொள்கிறேன்னு சொல்றாரில்ல. சரி, உங்க இடம் தான்... உங்களுக்கும் போக வர இடஞ்சல் தான்... நீங்க சொல்வதும் நியாயம் தான்,'' என சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினார்.
சம்பத்குமார், ''அய்யா... அவர் என்ன சொல்றார்ன்னு பாருங்க. நான், அவர் வண்டியை நிறுத்தக் கூடாதுன்னா, வேலி போடணுமாம், அப்பத்தான் அவர் வண்டியை இங்கே நிறுத்த மாட்டாராம்... என்கிட்ட வந்து சட்டம் பேசுறார். அதனால, அவர் வண்டியை இங்கே நிறுத்தக் கூடாது,'' என்று பிடிவாதம் பிடித்தான், சம்பத்குமார்.
அப்போது அவ்வழியே வந்த வங்கி மேலாளர், கூட்டத்தை விலக்கி, சம்பத்குமாரிடம் என்ன விபரம் எனக் கேட்டார். வங்கி மேலாளர் என்பதால் மரியாதையுடன் அவரிடம், அந்த இளைஞன் தன்னிடம் பேசியதையெல்லாம் ஒன்று விடாமல் எடுத்துக் கூறினான்.
சம்பத்குமார் கூறியதையெல்லாம், வங்கி மேலாளர் கவனமாக கேட்டு, இரு சக்கர வாகனத்தை வைக்க வந்த அந்த இளைஞனை பார்த்து, ''தம்பி... வண்டியை இங்கு வைத்து விட்டு போங்கள். நான் இவரிடம் பேசிக்கொள்கிறேன்,'' என்று சமாதானப்படுத்தி, அந்த இளைஞரை அனுப்பி வைத்தார்.
அந்த இளைஞர், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, சென்றதும், வேடிக்கை பார்த்த கூட்டமெல்லாம் கலைந்து சென்றது.
சம்பத்குமாரிடம், அவன் படிப்பு, வேலை மற்றும் அவன் குடும்ப சூழ்நிலை அனைத்தையும் விசாரித்து, எதுவும் பேசாமல், ''தம்பி... இன்று மாலை, 6:00 மணிக்கு மேல, நீங்க, என்னை, பேங்குக்கு வந்து பாருங்க,'' என்று சொல்லி சென்றார், வங்கி மேலாளர்.
சம்பத்குமார், வேகமாக வீட்டிற்குள் ஓடினான் சந்தோஷத்துடன். தந்தையை பார்த்து, ''அப்பா... நம்ம வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் பேங்க் மானேஜர், இன்னிக்கி சாயந்திரம், அவரை வந்து பார்க்கும்படி கூறியிருக்கிறார். நான், அவரை நம் வீட்டு வழியாக செல்வதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அனேகமாக, அவருடைய வங்கியில், அவர் செல்வாக்கில் எனக்கு ஏதாவது வேலை போட்டு கொடுப்பார்ன்னு நெனைக்கிறேன்,'' என்று கூறினான்.
வேலை கொடுக்கத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து, தன் கல்வி சான்றிதழ்களை எல்லாம் எடுத்து வைத்தான்; எப்போது மாலை வரும் என்று காத்திருந்தான்.
அன்று மாலை, 6:00 மணியானதும், சான்றிதழ்களுடன், வங்கி மேலாளரை பார்த்தான் சம்பத்குமார். வங்கி மேலாளர், சம்பத்குமாரை பார்த்தவுடன், புன்முறுவலுடன், எதிரில் இருக்கும் நாற்காலியில் அவனை அமரும்படி கூறினார். அவன் கொடுத்த சான்றிதழ்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார்.
சான்றிதழ்களை பார்த்துக் கொண்டே, ''மிஸ்டர் சம்பத்குமார், நீங்க ஏன் சுயதொழில் செய்யக் கூடாது. எல்லாருமே கவர்ன்மென்ட் வேலையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாமா... சுயதொழில் செய்தால், உங்கள் மூலம் சில பேருக்காவது நீங்கள் வேலை கொடுக்கலாமே,'' என்றார்.
''சார்... சுயதொழில் செய்ய வேண்டுமெனில், சிறிய முதலீடுக்காவது பணம் வேண்டுமே. மேலும், என்னைப் பொறுத்தவரை எந்தவித தொழிலும் எனக்கு தெரியாது,'' என்று வெளிப்படையாக பேசினான் சம்பத்குமார்.
''சம்பத்குமார்... உங்க வீட்டு முன், 'டூ - வீலர்ஸ்' நிறுத்தி இடைஞ்சல் பண்ணுகின்றனர் என்று நீங்க நினைப்பது, அவர்கள் மீது கோபப்படுவது எல்லாமே, உங்களுக்கு சரியான வேலையோ, வருமானமோ இல்லாத விரக்தியில் தான் என்று எனக்கு தோன்றுகிறது. நீங்களே அதை கொஞ்சம் மாத்தி யோசித்து பாருங்களேன்.
''உங்க வீட்டு முன், போதுமான காலியிடம் இருக்கு. வாகனம் நிறுத்த அனுமதித்து, அதற்காக சிறு தொகையை கட்டணமாக வசூலிக்கலாம். மீதமுள்ள இடத்தில், டீ போட தெரிந்த ஒருவரை வைத்து டீக்கடை ஆரம்பிக்கலாமே,'' என்று யோசனை கூறினார்.
''ஏன் சார்... என்னை டீ கடை ஆரம்பிக்க சொல்கிறீர்கள்... எனக்கு புரியவில்லையே!''
''எங்க பேங்க்குக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் இங்கிருந்து, 1 கி.மீ., துாரம் போய் தான் டீயோ, காபியோ சாப்பிட வேண்டியிருக்கு. ஏன், எங்க பேங்க் ஸ்டாப்களுக்கு எல்லாம் அவ்வளவு துாரம் போய் தான் டீயோ, காபியோ வாங்கி வந்து கொடுக்கின்றனர்.
''மேலும், இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், உங்க வீட்டு முன், 'டூ - வீலர்'களை நிறுத்திவிட்டு, டீயோ, காபியோ கண்டிப்பாக குடிப்பார். அதனால், உங்களுக்கும் டீ கடையில் வியாபாரம் நடக்கும். அப்போது உங்களுக்கும், 'டூ - வீலர்'கள் வீட்டு முன் வைப்பது இடைஞ்சலாக தோன்றாது; மாறாக சந்தோஷப்படுவீர்கள். என்ன சம்பத்குமார், இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்,'' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் வங்கி மேலாளர்.
'வங்கி மேலாளர் கூறியபடி, நான், ஏன் மாத்தி யோசிக்காமல் இருந்து விட்டேன். நல்லவேளையாக, இப்போதாவது நல்ல வழி காட்டினாரே... வங்கி மேலாளர்....'' என்று சம்பத்குமார்
சிந்தித்து கொண்டிருக்கும்போது...
''என்ன, சம்பத்குமார்...'' என்று வங்கி மேலாளர் குரல் கொடுத்த பின் தான், தன் நிலைக்கு வந்தான் சம்பத்குமார்.
''சார்... நீங்க சொன்னபடி டீ கடை ஆரம்பிக்க முடிவு செய்து விட்டேன். எனக்கு, நல்வழி காட்டிய உங்களுக்கு ரொம்ப நன்றி சார்,'' என, நம்பிக்கையுடன் எழுந்து சென்றான்.
த.வேல்முருகன்