உலக அளவில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்க, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 80 நாடுகளில், பள்ளி மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும், புவி வெப்பமயமாதலின் காரணமாக, குளிர், வெப்பம், மழை என, அனைத்து காலகட்டங்களும் மாறி, மோசமான பருவநிலை மாற்ற விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில், ஜம்மு - காஷ்மீர், டில்லி போன்ற பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
அமெரிக்காவில், இந்த ஆண்டு துவக்கம் முதலே, வரலாறு காணாத பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவிற்கு பலர் பலியாகினர். இவை அனைத்திற்கும் பருவநிலை மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் கடுமையான விளைவுகளை தவிர்க்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, 80 நாடுகளில் உள்ள நகரங்களில், 'பள்ளிகளுக்கு செல்வதை தவிர்த்து, போராட்டத்தில் ஈடுபட வேண்டும்...' என, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களிலும், ஆஸ்திரேலியாவில், கான்பெர்ரா, மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களிலும் அமைதியான முறையில், பள்ளி மாணவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகளாவிய இந்த போராட்டம், 'வெள்ளிக்கிழமைகள் வருங்காலத்திற்கான துவக்கம்' எனும் இணையத்தின் மூலம், மாணவர்களை ஒருங்கிணைத்துள்ளது.
முதன் முறையாக, பருவநிலை மாறுதல்களுக்காக, சுவீடனை சேர்ந்த பள்ளி மாணவியான, கிரேட்டா தன்பெர்க், 16, நடத்திய போராட்டத்தை தொடர்ந்து உருவாக்கப்பட்டது, இந்த இணையதளம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலை தடுக்க வேண்டி, சிறிய பதாகையுடன், சுவீடன் பார்லிமென்ட் வாசலில், அமைதியான முறையில், தனி ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டார், அப்பெண். இந்த ஆண்டிற்கான அமைதிக்கான, நோபல் பரிசுக்கு இவரை பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து, தற்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம், உலகளவில் பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜோல்னாபையன்.