வடையை வீசி எறிந்தால், பறவைகள் ஓடி வந்து கொத்தி செல்லும். ஆனால், பைரவருக்கு அணிவித்த வடை மாலையை சன்னிதி மேல் போட்டாலும், ஒரு பறவை கூட கொத்தாத அதிசயம், சிவகங்கை மாவட்டம், பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவிலில் நடக்கிறது.
இப்பகுதியை, மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்த போது, ஒரு போரில் வென்றார். அதற்கு, காணிக்கையாக, சிவனுக்கு கோவில் கட்ட விரும்பினார். எந்த இடத்தில் கோவில் கட்டுவதென குழப்பம் ஏற்பட்டது.
அவரது கனவில் தோன்றிய சிவன், 'ஒரு குறிப்பிட்ட இடத்தில், லிங்கம் இருக்கும்; அங்கேயே கோவில் எழுப்பலாம்...' என்று சொன்னார். கனவில் குறிப்பிட்ட இடத்தில் லிங்கத்தைக் கண்டு, கோவில் எழுப்பினார், மன்னர்.
வாசனை மிக்க மலர்கள் நிறைந்த, வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால், சுவாமிக்கு, சுகந்தவனேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டது. இக்கோவிலில், காசி பைரவர் இருக்கிறார். இவர், நவ பாஷாண சிலையாக இருப்பது விசேஷம்.
பழநி முருகனை பிரதிஷ்டை செய்த போகர், இந்த சிலையையும் பிரதிஷ்டை செய்ததாக கூறுகின்றனர். உடன், நாய் வாகனத்தை பிடித்தபடி, பாலதேவர் என்பவர் இருக்கிறார்.
பவுர்ணமியன்று மாலையில், இவருக்கு, சிறப்பு பூஜை நடக்கிறது. இவரது சன்னிதி முன் மண்டபத்தில், மற்றொரு பைரவர் காட்சி தருகிறார்.
காசி பைரவரின் சிலை, நவ பாஷாணத்தால் ஆனது என்பதால், இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இல்லை. எனவே, பைரவருக்கு அணிவிக்கும் வடை மாலை மற்றும் அபிஷேக தீர்த்தம் ஆகியவற்றை, பிரசாதமாக கொடுப்பதில்லை.
வடை மாலையை சன்னிதிக்கு மேலே போடுகின்றனர். கலியுக அதிசயமாக, இதை பறவைகளும் சாப்பிடுவதில்லை. அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் தொட முடியாதபடி, கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராகக் கருதி வழிபடுகின்றனர். இவர், பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக, பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன், காட்சி தருகிறார். ஆனால், பக்தர்களால் பின்புற முகத்தை பார்க்க முடியாது.
அம்பாள் சமீபவல்லிக்கு, தனி சன்னிதி இருக்கிறது. பிரகாரத்தில் அருகருகே, நான்கு விநாயகர்கள் காட்சி தருகின்றனர்.
மதுரையில் இருந்து, 60 கி.மீ., துாரத்தில் திருப்புத்துார். இங்கிருந்து, 8 கி.மீ., தொலைவில் கண்டரமாணிக்கம். இங்கிருந்து பிரியும் சாலையில், 2 கி.மீ., சென்றால், கோவில் உள்ளது. காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை திறந்திருக்கும்.
தி.செல்லப்பா