மன்னித்து விடுங்கள்...
மனக் காயங்களை
குணப்படுத்தும் ஆற்றல்
மன்னிப்பு எனும் மாமருந்துக்கு
மட்டுமே உண்டு!
பழிக்கு பழி வாங்க
துடிக்கும் மனங்களில்
அமைதி பறவை
கூடு கட்டுவதில்லை!
மன்னிக்கும் மனங்களில் தான்
மகிழ்ச்சி பூக்கள்
நொடிக்கு நொடி
மலர்ந்து கொண்டே இருக்கும்!
குறை காணும் போதெல்லாம்
ஆனந்தத்தின் வாசல்களை
அடைத்து விடுகிறோம்!
ஆம்...
குறையே இல்லாத மனிதர் இல்லை
குறை மட்டுமே காண்பவன்
மனிதனே இல்லை!
இன்னா செய்தாருக்கும்
நன்மை செய்யும்
வள்ளுவரின் மனம் பெற்றவர்கள்
மகிழ்ச்சி சிகரத்தில்
வெற்றிக் கொடி பிடிக்கின்றனர்!
- கவிதாசன், கோவை.