பா-கே-ப
ஆகஸ்ட் 5, காலை, 11:30 மணி. ஊழியர்களுக்கு, டீ கொடுத்து விட்டு, அன்று, அஞ்சலில் வந்த கடிதங்களை பிரித்து வைக்கும் பணியில் இருந்தேன்.
'டிவி'யில், அயோத்தியில், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பூமி பூஜையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
தனக்கு, 'ஒர்க் பிரம் ஹோம்' கொடுக்கவில்லை என்ற கடுப்பில் அமர்ந்திருந்தார், லென்ஸ் மாமா; அது, முடியாதல்லவா...
அந்நேரம், ஜோல்னாபை சகிதம் உள்ளே நுழைந்தார், 'திண்ணை' நாராயணன். 'டிவி'யில் ஒரு கண்ணை பதித்துக் கொண்டிருந்த, மாமாவை பார்த்து, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கைகளை உயர்த்தினார்.
மேலும், கடுப்பான லென்ஸ், 'இவருக்கு, கொதிக்க கொதிக்க டீ கொடுப்பா... நாலு நாளைக்கு பேச முடியாம போகட்டும்...' என்று எரிச்சல்பட்டார்.
மாமாவுக்கு, 'மூடு' சரியில்லை என்றதும், என்னிடம் பேச்சு கொடுத்தார், நாராயணன். அவர் கூறுவதை கேட்டுக் கொண்டாலும், அவர் கையில் இருந்த புத்தகத்தில் என் கவனம் சென்றது.
கண்ணதாசன் எழுதிய, 'எண்ணங்கள் ஆயிரம்' புத்தகத்தை வாங்கி, புரட்டினேன். அதில் ஒரு அத்தியாயம்:
நான் ஒரு இந்து என்பதில் பெருமைப்படுகிறேன்.
எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால், இந்துவாகவே வாழ விரும்புகிறேன்.
நான், கடவுளை நம்புகிறேன்; அவனை காட்டியவனை போற்றுகிறேன்; அந்த கடவுளை கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.
ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி, இதயத்தை ஆட்சி செய்கிறது.
நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.
நேரான வாழ்க்கையை இதயம் விரும்புகிறது. பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.
குறிப்பாக, ஒரு இந்துவுக்கு, தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.
கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.
'என்னை திட்டுகிறவன் தான், என்னை அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே, அவன் தான் முதல் பக்தன்...' என்பது இறைவனின் வாக்கு.
இந்து மதத்தை போல், சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை.
நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மத சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும், சகித்துக் கொள்கிறான், இந்து.
ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாக பிறந்தது போல் எண்ணி, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தை கேலி செய்யும் பகுத்தறிவு தந்தைகள், மற்ற மதத்தின் மீது கை வைக்கட்டும் பார்க்கலாம்...
கடந்த, 40 ஆண்டுகளில், ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லை.
பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம், 'ரேட்டு' வாங்கி, சொத்து சேர்க்கும், 'பெரிய' மனிதர்களைத்தான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், 'குடும்பம் நடத்தும் வியாபாரம்' என்பதை அறியாமல், வாழ்க்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.
பருவ காலத்தில், சருமத்தின் அழகு மினுமினுப்பதை போல், ஆரம்ப காலத்தில், இந்த வாதத்தை கேட்டு, ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
நடிகையின், 'மேக் - அப்' கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனை போல், அன்று, இந்த வாதத்தை கேட்டு, நானும் ஏமாந்திருக்கிறேன்.
அந்த கவர்ச்சி, எனக்கு குறுகிய கால கவர்ச்சியாகவே இருந்ததற்கு காரணம், இறைவனின் கருணை தான்.
என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும், இன்று சந்திர மண்டலத்துக்கு பயணம் போகும் அமெரிக்காவையே அடிமை கொண்டு, ஆன்மிக நெறியில் திளைக்க வைத்திருக்கின்றனர்.
வேண்டுமானால், 'பணத்தறிவில்' முன்னேறி விட்டது என்று சொல்லலாம்.
ஆளுங்கட்சியாக எது வந்தாலும், ஆதரித்து, தன் கட்சியும் உயிரோடு இருப்பதாக காட்டி, எது கொடுத்தாலும் வாங்கி, வாழ்க்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!
உலகில், நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை.
இதை உலகெங்கும் நிரூபித்து வருகிறான், இறைவன்.
அவர்கள் எப்படியோ போகட்டும்.
இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள், கோவில்களுக்கு முன், பகுத்தறிவு விளையாட்டு விளையாடி பார்க்கலாமென்று கருதுகின்றனர். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.
நம்பிக்கை இல்லாதவன், கோவிலுக்கு போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?
அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்க, சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க துவங்குகின்றனர்.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்து, 'போகாதே போகாதே என் கணவா...' என்று பாடியவர்களுக்கு, நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்!
நாட்டுப் பற்று இல்லாதவர்களுக்கு, தெய்வப் பற்று எங்கிருந்து வரும்!
தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு, நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்!
தமிழகத்தின் 7 கோடி மக்களில், நீங்கள், சலித்து சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களை கூட காண முடியாது.
பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழநியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, இந்த காரியங்களுக்கு, யாரும் துணை வரமாட்டார்கள்.
- இப்படி எழுதியுள்ளார்.
படித்து முடித்ததும், இன்றைய, 'கருப்பர்' கூட்டத்தின் நிலையையும், கண்ணதாசன் எழுதியதையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன்!
லென்ஸ் மாமாவை காணோம்... ஏதோ, 'அசைன்மென்ட்'டில் வெளியில் சென்று விட்டார்.