மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., விரும்பி கொண்டாடும் ஒரே பண்டிகை எது தெரியுமா. பொங்கல். எங்கே இருந்தாலும் பொங்கலுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார்.
எம்.ஜி.ஆர்., சினிமாவில் உச்சத்தை நோக்கி முன்னேறி கொண்டிருந்த 1953 காலகட்டத்தில், தற்போது அ.தி.மு.க., தலைமை அலுவலகம் உள்ள சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர்., நாடக மன்றமாக இயங்கியது.
நடிகர்கள், நடிகைகள், பின்னணி பாடகர்கள் என அந்த மன்றத்தில் ஐம்பது பேருக்கு மேற்பட்டோர் இருந்தனர். இந்த நாடக மன்றம் மூலம் இன்பக்கனவு, சுமைதாங்கி, இடிந்த கோயில் உள்ளிட்ட நாடகங்கள் நடத்தப்பட்டு மக்களிடம் பலத்த வரவேற்பையும் பெற்றன.
இந்த மன்றம் தான் எம்.ஜி.ஆர்., விரும்பும் பொங்கல் ஸ்பாட். பொங்கல் விழாவை இங்கு எம்.ஜி.ஆர்., நாடக மன்றத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுவார்.
மறுநாள் பொங்கல் பண்டிகைக்கு வேண்டிய ஏற்பாடுகளை முதல்நாளே எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் நிர்வாகிகளான ஆர்.எம்.வீரப்பன், எஸ்.கே.டி.சாமி, குமாரசாமி ஆகியோர் செய்து விடுவர். ஸ்டண்ட் குழுவில் இடம் பெற்றிருந்த மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் இதில் இறங்குவர். பொங்கல் விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., சொந்த செலவில் வேட்டி, சேலை, துண்டு வாங்கி கொடுப்பார்.
இதில் என்ன விசேஷம் என்றால் எல்லோருக்குமே பாரபட்சமின்றி ஒரே தரத்தில் ஒரே விலையில் அனைத்து வேட்டி, புடவைகள் வழங்கப்படும்.
எம்.ஜி.ஆரும் பொங்கலன்று அவற்றில் ஒன்றை எடுத்து உடுத்தி கொள்வார். அனைவரையுமே சமத்துவமாக எம்.ஜி.ஆர்., நடத்துவார். குடும்பத்தினருடன் காலையில் வந்து பங்கு கொள்வார்.
பொங்கலுக்கு வேட்டி, சேலைகளுடன் தனியாக பணம் வைத்த கவரும் கொடுப்பார். அதில் அந்த காலத்திலேயே ரூ.50, ரூ.100 என இருக்கும்.
கையில் வரும் கவரை எடுத்து வேட்டி, சேலைகளுடன் மன்றத்தினருக்கு வழங்குவார். அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்கு அதிக பணம் கொண்ட கவர் கிடைக்கும். அதிக பணம் பெறுவர் பல நாட்களுக்கு அதை கூறி கொண்டே இருப்பார். மன்றத்திலிருந்து சற்று தள்ளியிருந்த எம்.ஜி.ஆரின் தாய் இல்லத்தில் பொங்கல் வைத்து வழங்கப்படும். பின் மன்றத்தில் கயிறு இழுத்தல், மியூசிக் சேர் என போட்டிகள் நடக்கும்.
எம்.ஜி.ஆர்.,பெரிதும் மதித்த பழம்பெரும் இயக்குனர் கே.சுப்பிரமணியம், என்.எஸ்.கே., போன்றவர்கள் கலந்து கொள்வதும் உண்டு.
1962ல் பொங்கல் விழாவில் கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. அப்போது எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்ரபாணியும் எதிரெதிர் அணியில் இறங்கி கயிறு இழுத்தனர். இரு தரப்பும் விட்டு கொடுக்காமல் இழுக்க கயிறு அறுந்தே போனது பலத்த கரகோஷத்தை பெற்றது.
என்.எஸ்.கலைவாணன் நண்பர் வி.கே.ஆச்சாரி என்பவர் வயிற்றின் மீது பெரிய கருங்கல்லை வைத்து உடைக்க செய்வார். அவருக்கு எம்.ஜி.ஆர்., பணம் வழங்கி உற்சாகமூட்டுவார்.
சிலம்பம், குத்துசண்டை போட்டிகளை கடைசி வரை இருந்து எம்.ஜி.ஆர்., கண்டு ரசிப்பார். முதல்வரான பிறகும் அங்கு பொங்கல் கொண்டாடுவதை எம்.ஜி.ஆர்., வழக்கமாக கொண்டிருந்தார். ராமாவரம் தோட்டத்தில் பொங்கல் அன்று செல்லும் அனைவருக்கும் பொங்கலுடன் பணப்பரிசும் வழங்குவார் எம்.ஜி.ஆர்.,