தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, அரிசி ஏற்றுமதியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. களைகள் மற்றும் பூச்சிகளின் தொல்லையிலிருந்து விவசாயத்தை பாதுகாக்க, வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்துகின்றனர், இங்குள்ள விவசாயிகள்.
அறுவடை முடிந்த வயல்களில், நெற்பயிரின் துார் பகுதி அப்படியே இருக்கும். இவற்றை சாப்பிடுவதற்கு ஏராளமான பூச்சி, நத்தைகள் வயல்களுக்குள் உலா வரும்; இவற்றை அகற்றுவது, விவசாயிகளுக்கு சவாலான பணியாக இருக்கும்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஆயிரக்கணக்கான வாத்துகளை, இந்த வயல்களுக்குள் விடுகின்றனர். கடும் பசியில் இருக்கும் இந்த வாத்துகள், வயல்களில் இருக்கும் பூச்சி, நத்தை மற்றும் களைகளை முழுவதுமாக சாப்பிட்டு விடுகின்றன. இதற்கு பின், அந்த இடத்தை சுத்தப்படுத்தி, மீண்டும் விவசாயம் செய்கின்றனர்.
'இந்த வாத்து வைத்தியத்தால், எங்களுக்கு செலவு மிச்சம். பூச்சிகளை அழிக்க, அதிகமாக உரம் போட தேவையில்லை...' என்கின்றனர், தாய்லாந்து விவசாயிகள்.
— ஜோல்னாபையன்