கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் உள்ள கடற்கரை நகரம் நோடோ. சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரையை மிகவும் ரசிப்பர். இந்த பகுதி கடலில், 'ஸ்குவாட்' என்ற கணவாய் மீன் அதிகம். இதை, ராஜாமீன் என்றும் அழைப்பர். இதில் சமைக்கும் உணவு மிகவும் ருசியானது. அதற்காகவே பயணிகள் கூடுவர்.
பட்டையான உடலமைப்பு இருப்பதால், எளிதில் நீந்தும் திறன் பெற்றது. பெரிய இதயத்தை கொண்டது; சில வகை கணவாய்க்கு, மூன்று இதயங்கள் வரை இருக்கும். எதிரிகளிடமிருந்து தப்ப, இடத்திற்கு தக்கவாறு, வண்ணங்களை மாற்றும். இதன் உடலில் உள்ள வண்ணப்பை இதற்கு உதவும்.
பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில், கணவாய் மீன் உணவு பிரபலம். ஊட்டச்சத்து நிறைந்தது; உடல் வளர்ச்சிக்கு ஏற்றது. சிலருக்கு ஒத்துக் கொள்ளாது; அலர்ஜி ஏற்படும். அளவாய் சாப்பிட்டால் ஆபத்து இல்லை; அடிக்கடி சாப்பிட்டால் இதய நோய் வர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதில், 13 மீட்டர் நீளம் உள்ள அபூர்வ மீன்களும் உண்டு. சமீபத்தில், 13 அடி விட்டம் உள்ள முட்டை ஒன்று இந்த பகுதி கடலில் கிடைத்தது; அது கணவாய் மீன் முட்டை என தெரிந்தது. அவ்வளவு பெரிய முட்டை இட்ட மீனை தேடுகின்றனர், ஆய்வாளர்கள்.
இது பற்றி ஆராய்வதற்கு, கணவாய் மீன் போன்றே, ரோபோ என்ற இயந்திர மனிதனை உருவாக்கி, ஆழ்கடலில் ஆராய்ந்து வருகின்றனர்.
ஜப்பான் நோடோ நகர கடற்கரையில், கணவாய் மீனுக்கு பெரிய சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கொரோனா பாதுகாப்புக்காக, அரசு அளித்த நிதியில் இந்த சிலை எழுப்பப்பட்டதால் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நகரில் சுற்றுலா பயணியரை நம்பி, ஏராளமானோர் வாழ்கின்றனர்; அவர்களின் வாழ்வுக்கு, கணவாய் மீன் உணவு விற்பனை ஆதாரமாக உள்ளது. தற்போது நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட கணவாய் மீன் சிலையும், சுற்றுலா பயணியரை ஈர்த்துள்ளது.
- திலிப்