நாற்காலியில் அமர்வதெல்லாம்
தற்காலிகமானதென்று
இயற்கை எப்போதும்
அறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறது!
மரக்கிளை நாற்காலியில்
அமர்ந்திருக்கும்
இலைகளுக்குத் தெரியும்
இலையுதிர்காலத்தில்
விழுந்துவிட வேண்டுமென!
கோபுர நாற்காலியில்
அமர்ந்திருக்கும்
பறவைகளுக்குத் தெரியும்
பசி கொண்ட வேளையில்
பறந்துவிட வேண்டுமென!
மலையின் நாற்காலியில்
அமர்ந்திருக்கும்
முகில்களுக்குத் தெரியும்
மழையென ஒரு பொழுதில்
இறங்கிவிட வேண்டுமென!
பாடவேளை முடிந்ததும்
வகுப்பறை நாற்காலியை விட்டும்
இளைப்பாறல் முடிந்ததும்
பூங்காவின் நாற்காலியை விட்டும்
எழுந்துதானே ஆகவேண்டும்!
ரயில் வந்ததும்
நடைமேடை நாற்காலியிலிருந்தும்
விழா முடிந்ததும்
அரங்கத்தின் நாற்காலியிலிருந்தும்
இறங்கித்தானே ஆகவேண்டும்!
எங்கேயும், யாரும்
நிரந்தரமாய் எப்போதும்
அமர்ந்திருக்க முடியாதென
காலம் சொல்லிக்கொண்டே
இருக்கிறது!
மனிதன் தான் எப்போது
நிறுத்துவான் எனப்
புரியவேயில்லை...
பதவி நாற்காலியில் அமர்ந்ததும்
இது நிரந்தரமென நினைத்து
தலை, கால் புரியாமல்
ஆடுகிற ஆட்டத்தை!
என். கீர்த்தி, சென்னை.