ஆர். சாந்தி, வலையபட்டி, புதுக்கோட்டை: 'ஹெல்மெட்' கட்டாயம் என்ற சட்டம் வந்தவுடன், சென்னையின் நிலைமை எப்படி உள்ளது?
சென்னையில், 50 சதவீதம் பேர், 'ஹெல்மெட்' அணிய ஆரம்பித்து விட்டனர்... மீதமுள்ளோர், 'ஹெல்மெட்' அணியாமல், மூன்று அல்லது நான்கு பேராக, 'டூ - வீலரில்' செல்கின்றனர்... போலீசாரின் கவனிப்பின்மையே இதற்கு காரணம்!
எஸ். ஐஸ்வர்யா, அவ்வையார்பாளையம், ஈரோடு: தமிழக கவர்னர் ரவியை திரும்பப் பெற, தமிழக அரசு முயல்கிறதே... இது நடக்குமா?
நிச்சயம் நடக்காது... இது, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின், கனவில் தான் நடக்கும்
* ஜி. கலைவாணி, மறைமலைநகர், சென்னை: நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஸ்டாலின்... இவர்களில் யாருடைய பிரதமர் பதவி கனவு பலிக்கும்?
அவர்களின் கனவை நினைத்து, அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும்... இவர்களில் யாரும் பிரதமர் பதவிக்கு வர முடியாது... வாழ்நாள் முழுவதும் கனவு கனவாகவே இருக்கும்!
ஜி.ஜெயபாலன், மதுரை: தமிழை, 'காட்டுமிராண்டி மொழி' என்றவர், ஈ.வெ.ராமசாமி... அப்படி இருக்கையில், தமிழகத்தை, 'பெரியார் மண்' என்கின்றனரே, தி.மு.க.,வினர்...
காட்டுமிராண்டி மொழி என்று மட்டுமா சொன்னார்... நம் நாட்டு விடுதலையின் போது, தமிழகத்தை வெள்ளைக்காரர்களே ஆள வேண்டும் என்று சொன்னவர்... இவரைத் தான், திராவிட மாடல் அரசு துாக்கிக் கொண்டாடுகிறது... நல்ல, 'ஜோக்!'
முருகு. செல்வகுமார், சென்னை: குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பிரசாரம் செய்ய, முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் அழைத்தால் செல்வாரா?
காங்கிரஸ் அழைக்காது... ஏனென்றால், முதல்வருக்கு, குஜராத்தியும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது என்பது அக்கட்சிக்குத் தெரியுமே!
* வி.ஜெயசீலி, சென்னை: 'இன்னும் ஆறு மாதத்தில், போதை இல்லாத தமிழகமாகும்...' என்று, தமிழக, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உறுதி கூறியிருப்பது பற்றி...
இப்போதெல்லாம், தமிழக அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் தமாஷாக பேசுகின்றனர்; அறிக்கை, பேட்டி, கொடுக்கின்றனர்... சைலேந்திரபாபு, 'டாஸ்மாக்'கை மூடிவிடுவாரா... போதை ஒழிந்து விடுமா?
எஸ்.வேதநாயகம், சென்னை: என் நண்பனுக்கு, மற்றவருடன் பேசும் போது சரியாகப் பேசத் தெரியவில்லையே... அவனை எப்படித் திருத்துவது...
அவரிடம் பயனுள்ள சொற்களை மட்டுமே பயன்படுத்த சொல்லுங்கள்... பயனில்லாத சொற்களை அறவே தவிர்க்க அறிவுறுத்துங்கள்!