கோடை உழவு என்பது வெப்பமான கோடைகாலத்தில் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி ஆழமாக உழுதலாகும். சம்பாமுடிந்ததும் கோடைஉழவு அவசியம்.
முதற்பயிர் சாகுபடிஆனி, ஆடி மாதத்தில் துவங்கி 2வது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. மாசி - வைகாசி வரை நிலம் உழவின்றி தரிசாக பாதிப்புக்குள்ளாகி விடுகிறது.
பயிரில்லா காலத்திலும் வயலை உழுது புழுதி வயலாக மாற்றவேண்டும். உழவின் எண்ணிக்கையும் ஆழமும் களைகளின் தீவிரத்தைப் பொறுத்தது. 15 -- 20 நாட்கள் இடைவெளியில் பருவமழை வருவதற்கு முன் இரண்டுமுறை கோடை உழவு செய்யவேண்டும்.
வயலை சாய்வு மற்றும் குறுக்காக உழுவதால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கட்டிகள் உடைந்து மண் அரிப்பு தடுக்கப்பட்டு சத்துக்கள் இழப்பும் குறைகிறது. மழைகாலத்தில் பெய்யும் மழைநீர் வடிந்து வீணாகாமல் மண்ணுக்குள் சென்று நிலத்தடி நீர்மட்டமும் உயர்கிறது.
கோடைஉழவில் ஆழமாக உழுவதால் கடினமான மேலோட்டமான மேல் அடுக்கு உடைந்து மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண்ணின் ஊடுருவல் திறன் மற்றும் ஊடுருவக்கூடிய தன்மை அதிகரிக்கிறது. இது மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து மண்ணின் நீர்ப்பிடிப்பு திறன் அதிகரிக்கிறது.
கோடைஉழவு மேற்கொள்வதால் மண்ணின் குளிர்ச்சியின் காரணமாக மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
கோடைஉழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் காற்றோட்டம் மேம்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரிக்கிறது. மண்ணில் கரிமப் பொருட்களின் கலவை துரிதப்படுத்துவதால் பயிர்களுக்கு அதிக ஊட்டச் சத்துகள் கிடைக்கிறது.
மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி எச்சம் மற்றும் முந்தைய பயிர்களின் வேர், களைகள் மூலம் வெளிப்படும் தீங்கான ரசாயனம் விரைவாக சிதைவடைகிறது.
மழைநீரை உறிஞ்சும் திறன் மண்ணில் அதிகரிப்பதால் வளி மண்டல நைட்ரஜன் நீரில் கலந்து மண்ணுக்குள் சென்று மண்வளத்தை அதிகரிக்கிறது.
பெரும்பாலான பூச்சிகள் வெப்பமான கோடையில் மண்ணின் மேல் அடுக்கு அல்லது குச்சிகளுக்கு அடியில் உறங்கும். கோடை உழவு செய்யும் போது மண்ணை கவிழ்ப்பதால் சூரியகதிர்கள் மண்ணில் நுழைகிறது.
மண்ணின் மூலம் பரவும் பூச்சி, முட்டை, புழு மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிகிறது. அடுத்தடுத்த பயிர் சாகுபடியில் பூச்சிகளால் ஏற்பாடும் பாதிப்பு குறைகிறது.
பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதும் குறைவதால் விவசாயிகளுக்கு செலவும் குறைகிறது.
மண்ணுக்குள் மறைந்திருக்கும் நூற்புழுக்கள் அடுத்தடுத்த பயிர்களைத் தாக்கும்.
கோடைஉழவின் காரணமாக தீங்குவிளைவிக்கும் பாக்டீரியா வித்துகள் மற்றும் பூஞ்சை நுண்ணுயிரிகள் இறக்கின்றன.கோடை உழவு மற்றும் பயிர் சுழற்சி ஆகியவை நுாற்புழுக்களை கட்டுப்படுத்தும். ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப்படுகிறது.
- அருண்ராஜ், மண்ணியல் மகேஸ்வரன்,
உழவியல், தொழில் நுட்ப வல்லுநர்கள்,
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம்,தேனி96776 61410.