விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோலா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீம் என்ற இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்டோமாலஜி ரிசர்ச் சென்டர்) இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல் களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையிலும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் தீவிர ஆய்வில் இறங்கினர்.
இந்த ஆய்வு மாணவர்கள் புங்கை எண்ணெய், வேப்பெண்ணெய் மற்றும் தாவரங்களிலிருந்து பெறப்பட்ட சில பொருட்களைக் கொண்டு இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து உருவாக்கினார்கள். இதற்கு "பொன்னீம்' என்று பெயரிடப் பட்டுள்ளது.
பொன்னீம் தயாரிப்பது எப்படி: 45% வேப்ப எண்ணெய், 45% புங்க எண்ணெய் இரண்டையும் 10% சோப்புடன் கலக்கவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 10 லிட்டர் கொள்ளளவுள்ள தெளிப்பானில் முதலில் 300 மில்லி பொன்னீமை ஊற்றிவிட்டு பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண்ணீரில் நன்றாக கலந்துவிடும். மீண்டும் ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிறகு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லிட்டர் வரை தேவைப்படும்.
பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:
அசுவினி: இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.
காய்த்துளைப்பான்: தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் மிளகாய் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.
படைப்புழு: இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப்புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்ததுபோல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும். நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.
முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக்கொல்லியைக் கொண்டு நெல், பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி, தேயிலை போன்ற மலைப்பயிர்கள், ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகியவற்றைத் தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கலாம். இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. உற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவையும் அதிகரிக்கும். தொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபும்-638 653.
எம்.அகமது கபீர், 93657 48542.