பொது பிப்ரவரி 23,2021 | 12:26 IST
புதுச்சேரி அரசியல் வரலாற்றில் இது வரை 6 முறை ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 1969-1973 வரையிலான காலத்தில் இந்திய கம்யூ., ஆதரவுடன் தி.மு.க., ஆட்சியில் இருந்தது. அப்போது கம்யூ., ஆதரவை விலக்கியதால் பாரூக் மரைக்காயர் ஆட்சி கவிழ்ந்தது. 1974ல் அ.தி.மு.க., ராமசாமி முதல்வராக பதவியேற்றார். அரசுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமல், பட்ஜெட் தாக்கலின் போது பிரச்னைஏற்பட்டு 21 நாட்களில் அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. 1977ல் காங்., (எஸ்) ஆதரவுடன் அ.தி.மு.க., ராமசாமி முதல்வராக இருந்தார். ஓராண்டில் அ.தி.மு.க.,விற்கு அளித்த ஆதரவை காங்., (எஸ்) கட்சி வாபஸ் பெற்றது. இதனால் அந்த ஆட்சியும் கவிழ்ந்தது. அதன் பிறகு 1980 வரை கவர்னர்ஆட்சி அமலில் இருந்தது. 1980 முதல் 1983 வரையிலான காலத்தில் காங்.,ஆதரவுடன் தி.மு.க., ஆட்சி செய்தது. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தார். தென் மாநிலங்களின் முதல்வர் மாநாட்டில் பங் கேற்ற விவகாரத்தில் இரு கட்சிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, ஆதரவை காங்., விலக்கி கொண்டதால் தி.மு.க., ஆட்சி கவிழ்ந்தது. 1990ல் ஜனதாதளம் ஆதரவுடன் தி.மு.க., ஆட்சி நடந்தது. முதல்வராக ராமச்சந்திரன் பதவியில் இருந்தார். ஓராண்டில் ஜனதாதளம் ஆதரவை விலக்கி கொண்டதால் ஆட்சி மீண்டும் கவிழ்ந்தது. தற்போது முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு 2016 இல் பதவியேற்று 4 ஆண்டுகள் 9 மாதங்கள் காலத்தை பூர்த்தி செய்தது. அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்ததால் தற்போது 6-வது முறையாக ஆட்சி கவிழ்ந்துள்ளது.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: