பொது மே 29,2022 | 00:00 IST
தெலங்கானா மாநிலம் நர்னூரை சேர்ந்தவர் பவார் தேவிதாஸ். இவரது மனைவி- சாவித்திரிபாய். இவர்களது மகள் ராஜேஸ்வரி வயது 25. ராஜேஸ்வரி அதே கிராமத்தை சேர்ந்த ஷேக் அலிம் என்பவரை காதலித்தார். பெற்றோர் கண்டித்தனர். 2 மாதங்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி காதலனை ராஜேஸ்வரி திருமணம் செய்து, மகாராஷ்டிராவில் குடியேறினார். ராஜேஸ்வரி, -ஷேக் அலிமை கண்டுபிடித்த உறவினர்கள், இருவரையும் நர்னூருக்கு அழைத்து வந்தனர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரிந்து விட வேண்டும் என பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். இளம்பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் கணவருடன் செல்ல விரும்புவதாக கூறி பெற்றோருடன் ராஜேஸ்வரி சண்டையிட்டார். இந்நிலையில், ராஜேஸ்வரி கழுத்தறுபட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார். கழுத்தை அறுத்து தற்கொலை செய்ததாக, பவார் தேவிதாஸ் முதலில் கூறினார். போலீசார் துருவித்துருவி விசாரித்தபோது, குடும்ப கவுரவத்தை காற்றில் பறக்கவிட்ட மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து