சிறப்பு தொகுப்புகள் ஜூன் 04,2023 | 20:19 IST
அமெரிக்கா சென்றுள்ள ராகுல், கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலியில் தொழில் தொடங்கி நடத்தும் இந்தியர்களுடன் உரையாடினார். நிகழ்ச்சிக்கு எற்பாடு செய்தவர் ஷான் சங்கரன். FixNix என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்துகிறார். மனைவி கயல்விழியுடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனம் தொடங்கி பெரிய நிலைக்கு வந்திருக்கிறார் ஷான் என அறியப்படும் சண்முகவேல் சங்கரன். ராகுல் பற்றிய அவரது மதிப்பீடு இது: நவீன தொழில்நுட்பம் குறித்து ராகுலுக்கு ஆழமான புரிதல் இருக்கிறது. அந்த ஆர்வம் அப்பா ராஜீவிடம் இருந்து வந்திருக்கும் என்கிறார். லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் அபார சக்தி கொண்டவை. தீமைக்கு பயன்படுத்துகிறார்களே என்று டெக்னாலஜியை தடை செய்தால், அதன் சக்தியால் கிடைக்க கூடிய பலன்களை நாம் அனுபவிக்க முடியாது என்று ராகுல் புரிந்து வைத்திருக்கிறார். தடை செய்வதை விட அவற்றை ஒழுங்குபடுத்துவது சிறப்பு என ராகுல் நம்புகிறார். டிக் டாக் செயலியை இந்திய அரசு தடை செய்தது. ஆனால் அமெரிக்க அரசு அந்த கம்பெனியின் தலைவரை வரவழைத்து எம்.பி.க்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்ல வைத்தது. ராகுல் இந்த அணுகுமுறையை ஆதரிக்கிறார். எல்லாம் தெரிந்தவராக அவர் காட்டிக் கொள்வில்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். பதவி, அதிகாரம் மீது அவருக்கு ஆசை இல்லை. இருந்தால் என்றைக்கோ பிரதமர் ஆகி இருக்கலாம். இரண்டு முறை தேடி வந்த வாய்ப்பை ஒதுக்கியதில் இருந்தே ஆசைகள் இல்லாத அவரது மனதை உணரலாம். யார் மீதும் அவருக்கு கோபம் வெறுப்பு இல்லை. எவ்வளவு கேலி செய்தாலும் துன்பம் கொடுத்தாலும் புன்னகையுடன் கடந்து போகும் ராகுலை வாழும் புத்தராக பார்க்கிறேன். அரசு வீட்டில் இருந்து அவரை வெளியேற்றிய நேரத்திலும் பிரதமர் மீது அவர் வெறுப்பு காட்டவில்லை. இளைஞர்களுக்கு சிறந்த ரோல் மாடல் ராகுல் என புகழ்ந்து தள்ளினார் ஷான் சங்கரன். இவர் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பாதையில், கிராமவாசி இளைஞர்களுக்காக பல்கலைக்கழகம் நிறுவ ஏற்பாடு செய்து வருகிறார்.
வாசகர் கருத்து