ரோமாபுரி கட்டடகலையின் ரகசியம் !
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கட்டடங்களுக்கு, ரோம் நகரம் பிரபலமானது. அது எப்படி, பூகம்பங்களையும் தாங்கி, காலம் கடந்து நிற்கும் உறுதியான கட்டடங்களைக் கட்ட முடிந்தது?
இந்தக் கேள்வியோடு, ரோமானிய கட்டட மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
அந்த கட்டிடங்களின் உறுதிக்குக் காரணம், அந்தக்கால 'காங்கிரீட்'டான சுண்ணாம்பு மணல் ஜல்லி கலவையில்தான் ஒளிந்து இருந்தது.
குறிப்பாக, இத்தாலிய சுண்ணாம்பில் இருந்த 'லைம் கிளாஸ்ட்ஸ்' என்ற தாது, இன்றும் உறுதியாக நிற்கும் பண்டைய ரோமாபுரி கட்டடங்கள் அனைத்திலுமே இருந்தது.
கட்டடத்தில் லேசாக விரிசல் ஏற்பட்டால், இந்தத் தாது ஈரப்பதத்துடன் வினைபுரிந்து, கால்சியம் செறிந்த திரவமாக மாறுகிறது. பின், அதுவே கால்சியம் கார்பனேட் படிகமாக மாறி, விரிசலை நிரப்பிக்கொள்கிறது.
சுண்ணாம்பை தண்ணீருடன் கலக்கும்போது சூடாக கொதிக்கும். அதே சூட்டுடன் மணல், ஜல்லி கலந்து கட்டடமாகக் கட்டுவதும் பழைய ரோமாபுரிக் கட்டடங்களின் உறுதிக்குக் காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எனவே, மீண்டும் சுண்ணாம்பு கான்கிரீட்டுக்கு மவுசு வருமா?