விநாயகருக்கு அருகம்புல் படைக்கப்படுவது ஏன்? அனலாசுரனின் கதை !

புராண காலத்தில் அனலாசுரன் என்றொரு அரக்கன் இருந்தான். அவன் வாயிலிருந்து அடிக்கடி நெருப்பை கக்குவான். இதில் அத்தனை பொருட்களும் கருகி சாம்பலாகிவிடும்.

வயல்வெளி, வீடுகள் என எல்லா இடங்களிலும் நெருப்பை உமிழ்ந்து விளையாடினான் அனலாசுரன். இதனால் உணவுப் பொருட்கள், வீடுகளை இழந்து மக்கள் துன்புற்றனர்.

அனலாசுரன் மேல் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அது எல்லாமே ஆவியாகிவிடும். அவனது நெருப்பு சக்தி அந்த அளவுக்கு வீரியம் உள்ளது.

இந்திர தேவனின் வஜ்ஜிராயுதம், வெங்கடாஜலபதியின் சுதர்சன சக்கரம், சிவனின் திரிசூலம் ஆகிய எந்த ஆயுதங்களும் அனலாசுரனை எதுவும் செய்யாது.

எனவே, விநாயகர் அனலாசுரனோடு போரிடத் தயாரானார். கடுமையான போரில் விநாயகர் ஏவிய அத்தனை ஆயுதங்களையும் நெருப்பைப் பயன்படுத்தி சாம்பலாக்கிவிட்டான் அனலாசுரன்.

இதனால் விநாயகர் அனலாசுரனை அப்படியே விழுங்கி விட்டார். அவன் அழிந்து போனாலும், உடலில் இருந்த நெருப்பு விநாயகர் வயிற்றை எரிச்சலடையச் செய்தது.

வயிற்று எரிச்சல் தாங்க முடியாமல் தவித்தார் விநாயகர். வருணன் மழையை அவர் மேல் பொழிவித்துக் குளிர வைக்க முயற்சித்தும் முடியவில்லை.

இந்திரன், பார்வதி, சிவன் ஆகியோரின் முயற்சியும் தோற்றதால், தேவர்கள் கஷ்யப முனிவரின் உதவியை நாட, அவர் 21 அருகம்புற்களை விநாயகரிடம் கொடுத்து உண்ணச் சொன்னார்.

அருகம்புல்லை சாப்பிட்டு எரிச்சல் முற்றிலுமாக மறைய, பரவசமாகினார் விநாயகர். அன்று முதல் தனக்கு அருகம்புல் மிகவும் உகந்தது.

அதை சதுர்த்தி பூஜையில் சேர்த்துக் கொள்பவர்கள் வாழ்வில் நலமே நிறையும் என்றும் வரமருளினார். இதனால்தான் விநாயகர் சதுர்த்தி அன்று அருகம்புல்லை நாம் சமர்ப்பித்து வழிபடுகிறோம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...