காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, பழுதடைந்த வாகன பேட்டரிகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சாப்பூர் தாலுகா வளாவி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(27).
எய்சர் லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது லாரியில் (பதிவு எண் கே.எ.07 7627) சென்னையிலிருந்து பழுதடைந்த 400 வாகனப் பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கிச் சென்றார். நள்ளிரவு 12.45 மணிக்கு, காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பஸ் நிலையம் அருகே சென்றபோது, லாரியிலிருந்து புகை வருவதை நாகராஜ் கண்டார். உடனே லாரியை நிறுத்திவிட்டு பின்னால் சென்று பார்த்தார். லாரியில் தீ பிடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் லாரி மற்றும் அதில் ஏற்றி வந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரிகள் எரிந்து சாம்பலானது. பேட்டரிகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

