"குப்பை'யில் கோமேதகம் குப்பைமேனி!

சாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் தெருவோரங்களில் வளரும் செடி குப்பைமேனி. குப்பை மேடுகளின் ஓரங்களில் வளருவதால் இதற்கு, குப்பைமேனி என்ற பெயர் வந்துள்ளது.

முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் இருப்பதை, அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த செடியில், அகாலிபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்பெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்த செடி, மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி சளியினால் ஏற்பட்டுள்ள கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது.

இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.

இந்த இலையின் பொடியை மூக்கில் பொடிபோல் இழுக்க, நீர் வடிந்து தலைவலி உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். குப்பைமேனியின் வேர், வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது.

இலைகள் தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகிறது. சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களை ஆற்றுகிறது. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர படுக்கைப்புண்கள் தீரும்.