ஞாபகம் வருமே.. ஞாபகம் வருமே… வல்லாரை போதுமே…

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் போன்றவை உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும்.

வல்லாரை கீரை, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி, தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டால், மூளை சோர்வு நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும். பச்சையாக சாப்பிட்டால், மூளை நரம்புகள் பலம் பெறும்.

இக்கீரை, இருமல், தொண்டைக்கட்டை நீக்குவதுடன், பல் ஈறுகளை வலுப்படுத்தும். காச நோய்க்கு சிறந்த மருந்து.

இக்கீரையுடன், சம அளவு கீழா நெல்லியை அரைத்து, அதன் விழுதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும்.

வல்லாரை கீரை, துளசி, மிளகு மற்றும் சீரகம் சம அளவு எடுத்து, மைய அரைத்து, மிளகு அளவிற்கு உருட்டி, அதை நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இருமல், சளி, நீர்கடுப்பு, தோலில் அரிப்பு போன்றவற்றிற்கு இதை, மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

இக்கீரையை நல்லெண்ணெய் அல்லது தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி, தைலமாக தலையில் தேய்த்து வந்தால், உடல் உஷ்ணம் மற்றும் உடல் எரிச்சல் குறையும்.

மேலும், வல்லாரைக் கீரையை, சம அளவு வெந்தயத்துடன் சேர்த்து, சிறிதளவு ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில், 10 கிராம் சாப்பிட்டால், உடல் சூடு, கண் எரிச்சல் மற்றும் தலைவலி மட்டுப்படும்