ஸ்டிராய்டு மருந்து அதிக பயன்பாட்டால் பார்வை பறிபோகுமா?
பொதுவாக ஒவ்வாமை, தோல் நோய்கள் மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்காக அதிக அளவில் ஸ்டிராய்டுகள் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்தியாவில், டாக்டர்களின் ஆலோசனையின்றி, 'ஸ்டிராய்டு' மருந்துகளைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.
இது, 'செகண்டரி குளுக்கோமா' எனும் இரண்டாம் நிலை கண் அழுத்த நோய்க்கு முக்கியக் காரணமாகிறது.
இதனால், பார்வையை மீண்டும் பெற முடியாத அளவுக்குக் குருட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது என கண் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
ஸ்டிராய்டுகள் மற்றும் மருந்தகங்களில் நேரடியாக வாங்கிப் பயன்படுத்தும் கண் சொட்டு மருந்துகள், நீண்ட காலப் பயன்பாட்டில் கண்ணின் அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
இவை, பார்வை நரம்பைப் பாதிப்பதை நோயாளிகள் ஆரம்பத்தில் உணர்வதில்லை.
நாட்டில், 1.30 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பாதிப்பு ஏற்பட்டவர்களில், 90 சதவீதம் பேருக்குத் தங்களுக்கு இந்நோய் இருப்பதே தெரிவதில்லை எனவும் கூறப்படுகிறது.
அறிகுறிகள் வெளியில் தெரியும்போது, பார்வை நரம்பு ஏற்கனவே நிரந்தரமாகப் பாதிப்படைந்திருக்கக்கூடும். எனவே, அனைவரும் பிரச்னை இருப்பின் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் நீண்ட காலமாக ஸ்டிராய்டு பயன்படுத்துவோர், ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்வது அவசியம்.