சண்டிபுரா வைரஸ் பரவுது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சண்டிபுரா வைரஸ் தொற்று என்பது ஈ, கொசு மற்றும் உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்று.
மஹாராஷ்டிராவில் சண்டிபுரா கிராமத்தில் 1965ம் ஆண்டு முதல்முறையாக இந்த தொற்று கண்டறியபட்டது. இதனால் இந்தொற்று சண்டிபுரா என்று அழைக்கப்படுகிறது.
ஜூன் மாதம் துவக்கத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வரை மூளை அழற்சி நோயால் 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 82 பேர் உயிரிழந்தனர்.
இந்தியா முழுவதும் 42 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 245 பேரில் 63 பேருக்கு சண்டிபுரா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் அல்லது நரம்பு மண்டல பாதிப்பு இருந்தால் டாக்டர்களிடம் அழைத்து செல்ல வேண்டும்.
இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், வாந்தி, நரம்பியல் குறைபாடுகள், மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.