கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயப்பட வேண்டாம்! தைரியம் தரும் மருத்துவர்கள்...
கொரோனா தடுப்பு முறையாக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மூன்று தவணைகளாக போடப்பட்டன. இந்தியாவில் மட்டும், 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், தங்கள் தடுப்பூசியால், ரத்தத்தை உறைய வைக்கும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அண்மையில் இங்கிலாந்து கோர்ட்டுகளில் தெரிவித்தது.
இது பல்வேறு தரப்பிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறை தலைவர் நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு தடுப்பூசியாக இருந்தாலும், அதை போட்டுக் கொண்ட ஓரிரு மாதங்களுக்குள் பக்கவிளைவுகள் ஏற்பட்டு முடிந்து விடும்.
மூன்றாண்டுகளுக்கு பின், பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதற்கான, எந்த ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணமும் இல்லை.
தடுப்பூசி போட்டவர்களுக்கு இருதயம், நுரையீரல், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதாக, எந்த ஆய்விலும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இயற்கையாகவே ஏதாவது ஒரு தடுப்பூசி போடும் போது, பிளேட்லெட்டுகள் குறையும். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பாதிப்பு ஏற்படாது. அதனால் அச்சம் கொள்ளத்தேவையில்லை என நம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் கூறினார்.