நிலத்தடி நீரில் அதிகளவில் யுரேனியம்... புற்றுநோய் ஏற்படும் அபாயம்!
குடிநீரில் கலந்திருக்கும் யுரேனியம் அளவு, லிட்டருக்கு 15 மைக்ரோ கிராமுக்குள் இருப்பது பாதுகாப்பானது என, உலக சுகாதார நிறுவனம், 2017ல் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு மேல் அளவு கூடும்போது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்து இருந்தது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், 1 லிட்டர் குடிநீரில், 30 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பதை அனுமதிக்கின்றன.
பாபா அணு ஆராய்ச்சி மையம் கடந்த ஜூன் மாதம் நடத்திய ஆய்வு முடிவில், 1 லிட்டர் குடிநீரில், 60 மைக்ரோ கிராம் அளவு வரை யுரேனியம் கலந்திருப்பது ஆபத்தை விளைவிக்காது என்று தெரிவித்தது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் துர்க், ராஜ்நந்தகாவ்ன், காங்கர், பெமேதரா, பலோட், கவர்தா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், மக்கள் குடிக்க பயன்படுத்தும் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது.
அதில், 1 லிட்டர் குடிநீரில் 100 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த 6 கிராமங்களிலும், சராசரியாக 86 - 105 மைக்ரோ கிராம் யுரேனியம் உள்ளது.
பலோட் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் 1 லிட்டர் நிலத்தடி நீரில் 130 மைக்ரோ கிராம் யுரேனியம் கலந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தண்ணீரை குடிப்பதால், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, நுரையீரல் மற்றும் தோல் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா மற்றும் கர்நாடகா உட்பட 12 மாநிலங்களில், நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு அதிகம் காணப்படுவதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் கடந்த ஜனவரியில் எச்சரித்துள்ளது.
இதில், பஞ்சாப் மற்றும் ஹரியானா, நாட்டுக்கு தேவையான கோதுமையில், 50 சதவீதத்தை விளைவிப்பது குறிப்பிடத்தக்கது.