குழந்தைகளுக்கு வறட்டு இருமல் இருந்தால்... அலட்சியம் வேண்டாம்

பருவநிலை மாற்றத்தால், 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் வலி, தொண்டை வலி, வறட்டு இருமல், சளி, காய்ச்சல் என பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, மழைக்காலம் முடிந்து, குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில், நிமோனியா வகை தொற்றால், குழந்தைகள் அதிகளவில் சுவாச பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

இதில், பாக்டீரியா ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்ற 'நிமோகோகல்' தொற்று, சைனஸ், மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேநேரம், 'மைக்கோபிளாஸ்மா நிமோனியா பாதிப்பு காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, குளிர், வியர்வை, வாந்தி, வயிற்றுப்போக்கு, சுவாச பிரச்னை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

தற்போது, இவ்வகை நிமோனியா தான், குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

முதலில் லேசான பாதிப்பு உண்டாகும். ஓரிரு நாட்களுக்கு பின் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், உரிய சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரலில் வீக்கத்தால் உயிரிழப்பு ஏற்படும்.

குறிப்பாக, டெங்கு, கொரோனா, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, நிமோனியா பாதித்தால், தீவிர பாதிப்பை ஏற்படும்.

நிமோனியா காய்ச்சலில், இதய பிரச்னை, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, புகைப்பழக்கம் உடையோர், கர்ப்பிணியர், நோய் எதிர்ப்பு குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்கு டாக்டர் அறிவுரையின்றி மருந்துகள் எடுக்கக்கூடாது. நன்கு காய்ச்சிய குடிநீர் அருந்தலாம்; நீராவி பிடிக்கலாம். இந்த நேரத்தில், புகைப்பிடிப்பதை தவிர்க்காவிட்டால் பாதிப்பு தீவிரமாகும்.

எனவே, இரவில் வறட்டு இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, அலட்சியம் காட்டாமல், உடனடி சிகிச்சையளிக்க வேண்டும்.