மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்முறை.... உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

வரும், 25ம் தேதி பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் சர்வதேச தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், 168 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, உலகளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக, 2000ம் ஆண்டில் இருந்த நிலைமையே, தற்போதும் தொடர்கிறது.

வன்முறைகளைத் தடுப்பதில், மிக மிகக் குறைந்த அளவிலேயே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2000 - 2023ம் ஆண்டில் பதிவான வழக்குகள், குற்றங்கள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

உலகளவில், 84 கோடி பெண்கள் (அதாவது, மூன்றில் ஒரு பெண்) வாழ்நாளில் ஒரு முறையாவது கணவர் அல்லது வெளியாட்களால் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும், 15 வயதுக்கு மேற்பட்ட, 31.6 கோடி பெண்கள் அதாவது 11 % பெண்கள், மிக நெருக்கமானவர்களால் உடல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

வெளியாட்களால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் 26.3 கோடி. ஆனால், பயம், சட்ட பாதுகாப்பின்மை போன்றவற்றால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.

இந்த வன்முறைகள், உடல் ரீதியிலான காயம் மட்டுமின்றி, பெண்களுக்கு நீண்டகால கடுமையான சுகாதார பிரச்னையையும் ஏற்படுத்துகிறது.

மனசோர்வு, பதற்றம், துாக்கமின்மை, மன அழுத்தம், தற்கொலை முயற்சி உள்ளிட்டவைகளுக்கு பெண்கள் அதிகம் ஆளாகின்றனர்.

மேலும், பாலியல் நோய் தொற்று ஏற்பட்டு, ஆண்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. சமூக, பொருளாதார பாதிப்புகளையும் உருவாக்குகிறது.

உலகளவில் தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைத் தவிர்த்த ஓசியானா பிராந்தியங்களிலுள்ள பெண்கள் மிக அதிகளவில் வன்கொடுமைகளை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள 37 % பெண்கள், தங்கள் வாழ்நாளில் மிகவும் அறிமுகமானவர்களால் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.