நாட்டிலேயே திருப்பூரில் தான் காற்றுமாசு குறைவு: ஆய்வில் தகவல்

இந்தியாவில், 33 மாநிலங்களுக்கு உட்பட்ட, 749 மாவட்டங்களில் நடந்த காற்றுமாசு ஆய்வில், திருப்பூர் மாவட்டத்தில் தான், குறைந்தபட்ச அளவாக மாசு பதிவாகியுள்ளது.

'கிரியா' எனப்படும், துாய்மையான காற்று மற்றும் ஆற்றுதலுக்கான ஆய்வு மையம், நாடு முழுவதும் விரிவான காற்று மாசு ஆய்வுகள் நடத்தியது.

அவற்றில், 447 மாவட்டங்களில், காற்று மாசு அளவு, ஒரு கனமீட்டருக்கு 40 மைக்ரோ கிராம் என்ற அளவு பதிவாகியுள்ளது.

இந்தியாவிலேயே, தலைநகர் டில்லியில் தான் காற்று மாசு அதிகம். ஒரு ஆண்டு மாசு '101' மைக்ரோ கிராம் அளவுக்கு பதிவாகியுள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக, சண்டிகர், திரிபுரா, ஹரியானா, பீஹார், மேற்கு வங்கம், பஞ்சாப், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் காற்று மாசு அதிகம் உள்ளது

காற்றுமாசு குறைவான மாநிலம் புதுச்சேரி (25 மைக்ரோ கிராம்) மற்றும் தமிழகம் (26 மைக்ரோகிராம்) என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக நடந்த ஆய்வுகளில், திருப்பூர் மாவட்டத்தில் தான், ஒரு கனமீட்டருக்கு, 21 மைக்ரோ கிராம் காற்றுமாசு பதிவாகியுள்ளது. இது 'கிரியா' ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் வாயிலாக, கடந்த, 11 ஆண்டுகளில், 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது.

இதுதவிர, பல்வேறு அமைப்புகள் மூலமாக மரம் அதிகம் வளர்ப்பதே, காற்றுமாசு குறைவுக்கு காரணமாக இருக்கலாம் என, பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்