உஷார்... ஸ்மார்ட் வாட்ச் ஸ்ட்ராப்களால் வரும் ஆபத்து
தற்போது பிரபலமாகவுள்ள ஸ்மார்ட் வாட்ச், தினமும் எவ்வளவு துாரம் நடக்கிறோம், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு என்ன போன்ற விபரங்களை கண்காணிக்கிறது.
ஆனால் இந்த வாட்ச்சை அணிய பயன்படுத்தும் பட்டைகளால் (ஸ்ட்ராப்) உடல்நல கோளாறுகள் ஏற்படும் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியானா பல்கலை, 22 வெவ்வேறு கடிகார நிறுவனங்களின் ஸ்ட்ராப்பை சோதித்ததில், 9 தயாரிப்புகளில் ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சாதாரணமாக அழகு சாதன பொருட்களில் பயன்படும் நிரந்தர வேதிகளின் அளவை விட, இவற்றில் நான்கிலிருந்து எட்டு மடங்கு அதிகமாக இருந்தன.
பி.எப்.ஏ.எஸ்., (Poly fluoro alkyl substances - PFAS) என்பவை, பல்வேறு துறைகளில் பயன்படக்கூடிய ஒரு வேதிப் பொருள்.
தண்ணீர், எண்ணெய் ஆகியவை ஒட்டாது என்பதால், துணிகள், குடை ஆகிய பொருட்கள் மீது பூச்சாகப் பயன்படுகிறது. இது சாதாரணமாக மட்காது.
இவற்றை நிரந்தர வேதிகள் (Forever chemicals) என்பர். இவை நம் உடலுக்குள் ஊடுருவினால், நீரிழிவு முதல் புற்று நோய் வரை ஏற்படும்.
நாம் நம் தோலை ஒட்டி அணிகிற கடிகார ஸ்ட்ராப்பிலிருந்து, இந்த ஆபத்தான வேதிப்பொருட்கள் உடலுக்குள் நுழைகின்றன.
இதனால், கைக்கடிகாரம் வாங்கும் போது, ஸ்ட்ராப்பிலுள்ள வேதிப்பொருட்கள் என்னென்ன என தெரிந்து அணிவது நல்லது என்று எச்சரித்துள்ளனர் டாக்டர்கள்.