செரிமானத்தை தடுக்கும் தண்ணீர்
வாயு தொல்லை, அஜீரணம், அசிடிட்டி போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டால், பிடிக்காத உணவு என்ன சாப்பிட்டோம்; இப்படி படுத்துதே என்று தான் பலரும் நினைப்பர்.
ஆனால், சாப்பிட்ட உணவு மட்டுமல்ல; தவறான நேரத்தில் சாப்பிடுவதும், தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும்கூட இதற்கு காரணம்.
பசியில்லாத, தேவையில்லாத நேரங்களில் உட்கொள்ளும் ஸ்நாக்ஸ், சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்களை செரிமான மண்டலம் ஜீரணிக்க தயாராக இருக்காது.
தொடர் பயணங்கள், நேரமின்மை காரணமாக இயல்பான பசி உணர்வை அலட்சியம் செய்து, நேரம் தவறி சாப்பிடுவது தான் செரிமானக் கோளாறுகளுக்கு முக்கிய காரணம்.
இது தவிர, சரியான உறக்கம் இல்லாதது, மன அழுத்தம், கோபம், எரிச்சல், பொறாமை போன்ற எதிர்மறையான எண்ணங்களும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இரவில் வேலை செய்பவர்கள், காலை உணவுக்குப் பின் உறங்க வேண்டும். மாறாக மதிய உணவுக்குப் பின் துாங்கினால், உடல் எடை அதிகரிப்பதுடன், கல்லீரல் சீராகச் செயல்படாது.
செரிமானக் கோளாறால் தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க, சரியான உணவை, சரியான அளவில், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.
மன அழுத்தம் உட்பட எதிர்மறை உணர்வுகள் இருக்கும் போது சாப்பிடுவது, பல நேரங்களில் செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.